6-வது முறையாக தமிழக முதல்வராக மே 23-ல் ஜெ. பதவியேற்பு... ஏற்பாடுகள் மும்முரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா வரும் மே 23- ந்தேதியன்று மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக 232 தொகுதிகளுக்கு மே 16-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
232 தொகுதிகளில் 134 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனிடையே வரும் திங்கள்கிழமையன்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் பகல் 12 மணியளவில் ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தின் முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். அவருடன் அதே நாளில் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.