6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெ. பதவியேற்றார்- அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவியேற்பு
சென்னை: தமிழக முதல்வராக 6-வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று பதவியேற்றார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் ரோசய்யா செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
15-வது சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவுடன், 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டிருந்தன. கடற்கரை சாலை முழுவதும் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சரியாக பகல் 12 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். ஜெயலலிதா ஆண்டவன் பெயரில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
முதலாவது சட்டசபை அமைந்த காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் காமராஜர் 2 முறையும், எம்.ஜி.ஆர். 3 முறையும், திமுக தலைவர் கருணாநிதி 5 முறையும் முதல்வர்களாக இருந்துள்ளனர். 6-வது முறையாகப் பதவியேற்ற முதல் முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார்.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவியேற்றனர். முதலில் 14 அமைச்சர்கள் பதவியேற்றனர். அடுத்ததாக 14 அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஆளுநருடன் புதிய அமைச்சரவை குழு புகைப்படம் எடுத்துக் கொண்டது.
விழா நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக வளாகமும், கடற்கரை சாலையும் விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்களும், அதிமுக தொண்டர்களும் சென்னைக்கு வந்திருந்தனர். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத்தின் சார்பில் நாசர், விஷால் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மதுரை ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் சசிகலா, ஜெயா டிவி நிர்வாகி பிரபா உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
காங்கிரஸுக்கு அழைப்பு இல்லை
இவ்விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ராஜ்யசபாவில் பாஜகவுக்கு அதிமுக தர முடிவெடுத்ததால்தான் இந்த நிலையை ஜெயலலிதா மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.