கொடுங்கோல் ஆட்சியை அகற்றுங்கள்… சங்கரன்கோவிலில் ஜெ.பிரச்சாரம்
சங்கரன்கோவில்: ''தற்போது நமது நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கொடுங்கால் ஆட்சியை அகற்றி செங்கோல் ஆட்சி மலர வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வசந்தி முருகேசனை ஆதரித்து, ஜெயலலிதா சங்கரன்கோவிலில் இன்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இந்த விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், அண்டை நாடுகளான இலங்கை, சீனா போன்றவை இந்தியாவை அச்சுறுத்தி வருகின்றன. அவர்களின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியா விடுபட வேண்டிய தருணம் இது.
தற்போது நமது நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கொடுங்கால் ஆட்சியை அகற்றி செங்கோல் ஆட்சி மலர வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகி விட்டது. இந்த ஊழல் நிறைந்த காங்கிரஸ் கூட்டணிஅரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழகத்திற்கு தேவையானவற்றை செய்யும் அரசு மத்தியில் அமைய வேண்டும்.
தொழில் துறைக்கும், வேளாண்மைக்கு மிக முக்கியமானது மின்சாரம். கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை.மின்சார உற்பத்திக்கான உடன்குடி மின் திட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4ஆம் மின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும் எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறும்.
தமிழக அரசு அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில், தென்காசி பகுதிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.