குணமடைந்து விட்டார், அவரது விருப்பத்திற்கேற்ப வீடு திரும்புவார்.. ஜெ. குறித்து பிரதாப் ரெட்டி தகவல்
ஜெயலலிதா தாம் விரும்பும்போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ தலைவர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரும்பும்போது வீட்டுக்கு திருவார் என்று அப்பல்லோ மருத்துவமனையில் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் 50 நாட்களுக்கு மேலாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நலம் தேறி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக செய்தியாளர்களை சந்திக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்... அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரேதான் முடிவு செய்வார் என கூறியிருந்தார்.
அதிகபட்சம் 7 வாரங்கள்...
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரதாப் ரெட்டி, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருகிறது. அவர் முழுமையாக குணமடைய 6 முதல் 7 வாரங்களாகலாம்.
தீவிர சிகிச்சை பிரிவு ஏன்?
மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வழக்கமான உணவை உட்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
தேவைப்படும்போது செயற்கை சுவாசம்
ஜெயலலிதாவுக்கு அவ்வப்போதுதான் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தேவைப்படும்போது சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார். எங்கள் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவை நன்றாக கவனித்து வருகின்றனர்.
விரும்பும்போது...
முதல்வர் ஜெயலலிதா அவரது விருப்பத்திற்கேற்ப வீடு திரும்புவார். அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அப்பல்லோ ரெட்டி கூறினார்.