நடிகர் விவேக் மகன் மரணம்....முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி இரங்கல்
சென்னை: நகைச்சுவை நடிகர் விவேக் மகன் பிரசன்னகுமார் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதே போன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோரும் தங்களது இரங்கல்களை விவேக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா, நடிகர் விவேக்குக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தி: "தங்களின் அன்பு மகன் பிரசன்னகுமார் 29.10.2015 அன்று உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கி கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், பிரசன்னகுமாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பிரசன்னகுமாரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி "நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் அன்பு மகன் பிரசன்ன குமார், திடீரென்று மறைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன் வேதனையடைந்தேன். மகனை இழந்து வாடும் விவேக், மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவின் மற்றொரு நகைச்சுவை நடிகரான வடிவேலு அன்பு மகனை இழந்த என் நகைச்சுவை நண்பன் விவேக்கின் குடும்பத்தினருக்கு அந்த ஆண்டவன்தான் ஆறுதல் கூற வேண்டும், கண்ணீருடன் வடிவேலு குடும்பத்தினர்" என்று கூறியிருக்கிறார்.
உடல் தகனம்
இன்று பிற்பகல் பிரசன்னகுமாரின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து, விருகம்பாக்கம் இளங்கோ நகர் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் நடந்தது.
முன்னதாக பிரசன்னகுமார் உடலுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாரிவேந்தர், திருநாவுக்கரசர், நடிகர்கள் விஜய், அஜீத், நாசர், சூர்யா, விஷால், பொன்வண்ணன், சிவகார்த்திகேயன், சித்தார்த், தனுஷ், எஸ்.வி.சேகர், நந்தா, பார்த்திபன், பாக்யராஜ், லாரன்ஸ், செந்தில், பாண்டியராஜன், மன்சூர் அலிகான், ஜீவன், வீரமணி, சின்னிஜெயந்த், சிங்கமுத்து, குமரிமுத்து. நடிகைகள் குஷ்பு, சரண்யா, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி, மும்தாஜ், உமாரியாஸ், குட்டிபத்மினி, பசிசத்யா, சோனியா, திவ்யதர்ஷினி, ஆர்த்தி, டைரக்டர்கள் சுந்தர்.சி., வேல்ராஜ், ஜனநாதன், ஹரி, லிங்குசாமி, பி.வாசு, சுசீந்திரன், பேரரசு, டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், சித்ரா லட்சுமணன், உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.