மேயர் தேர்வு முறையில் தான் போட்ட சட்டத்தை தானே திருத்திய ஜெயலலிதா...
சென்னை: மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார்.
மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்யலாம் என்று திமுக ஆட்சி காலத்தில் இருந்த சட்டத்தை மக்கள்தான் தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் திருத்தினார் ஜெயலலிதா. மீண்டும் கவுன்சிலர்களே மேயர்களை தேர்வு செய்யலாம் என்று
தற்போது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் போட்ட சட்டத்தை தானே திருத்தியுள்ளார் ஜெயலலிதா. ஆனால் இந்த சட்ட திருத்தத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தாக்கல் செய்த திருத்தத்தில், மாநகராட்சிகளுக்கான தேர்தல் கட்சிகளின் அடிப்படையிலேயே தற்போது நடத்தப்படுகின்றது. சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மாநகராட்சி மேயருக்கு இல்லாத காரணத்தால், மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை. எனவே, மாமன்ற உறுப்பினர்கள் மறைமுகமாக மேயர்களை தேர்ந்தெடுப்பது என அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தபோது திமுக உறுப்பினர் மா. சுப்பிரமணியன் எழுந்து தி.மு.க. சார்பாக இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தார். சபாநாயகர் தனபால் அவரது கருத்தை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தார்.
இதுவரை மேயர் தேர்தல் நேரடியாக நடந்தது. மக்களே ஓட்டுப் போட்டு மேயரையும், கவுன்சிலரையும் தேர்ந்தெடுத்தனர். இந்த சட்டம் நிறைவேறினால் இனி நேரடியாக மேயர் தேர்தல் இருக்காது. கவுன்சிலர் தேர்தல் மட்டும் நடைபெறும். கவுன்சிலர்கள் பெரும்பான்மை அடிப்படையில் மேயர் தேர்வு செய்யப்படுவார். கவுன்சிலர்களில் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படுவார். அவரது பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
- தமிழகத்தில் நீண்ட காலத்திற்குப் பின்னர் 1996ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்தனர்.
- 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக உள்ளாட்சி அமைப்புகளில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி தலைவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
- 2006ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள் என்று சட்டத்தை திருத்தியது.
- 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சி அமைப்பில் மீண்டும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மேயர்களை மக்களே தேர்வு செய்தனர்.
- அப்போது 10 மாநகராட்சி மேயர் பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றியது.
- அதிமுக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், மேயர் தேர்தலில் தான் போட்ட சட்டத்தை தானே திருத்தியுள்ளார் ஜெயலலிதா.
- புதிய சட்ட திருத்தத்தின்படி கவுன்சிலர்கள் மட்டுமே மேயர்களை தேர்வு செய்வார்கள். இதன் மூலம் கவுன்சிலர்கள் கவனிப்பு ஆளாவார்கள்.
- உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் மேயர் தேர்தல், ஆளும் கட்சிக்கு தனி தலைவலியாகவே இருக்கும்.
- சென்னை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் டிசம்பர் மாத வெள்ளம் போட்டு தாக்கியது. இதில் மேயர்களில் பணி அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை என்பது மக்களின் கருத்து.
- டிசம்பர் வெள்ளத்தினால்தான் சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளை இழந்தது அதிமுக
- மேயர் தேர்தலில் தோல்வியடையக்கூடாது என்று கருதியே
- அதே நிலை மேயர் தேர்தலுக்கும் வரக்கூடாது என்று கருதியே மேயரை இனி கவுன்சிலர்களே தேர்வு செய்யலாம் என்று புதிதாக சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- இந்த புதிய சட்டத்திருத்தத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.