ஜெயலலிதாவிற்கு 16ம் நாள் காரியம் - நினைவிடத்தில் 68 கிலோ எடை இட்லி படையல்..!
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமான ஜெயலலிதாவின் உடல் கடந்த 6ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 16ஆம் நாள் துக்கம் அனுசரிக்கும் விதமாக, அவரின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லியை சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் ஆர்.கே.நகர் மக்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட இட்லியை அவரது நினைவிடத்தில் படையலிட்டு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் ஜெயலலிதாவின் உருவம் பொறிக்கப்பட்ட இட்லிக்கு அஞ்சலி செலுத்தினர்.
அம்மாவிற்காக அஞ்சலி
ஜெயலலிதாவின் மீதான அன்பு, பக்தியினால் தினசரியும் அவரது நினைவிடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 16ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு 68 கிலோ இட்லி சமைத்து எடுத்து வந்திருந்தனர்.
கண்ணீர் மல்க சமைத்தோம்
இந்த இட்லியை சமைத்த சமையல் கலைஞர்கள் கண்ணீர் மல்க சமைத்ததாக கூறினர். அன்னை தெரசா, அப்துல் கலாம் ஆகியோரின் உருவங்களை இட்லியில் சமைத்ததை விட அம்மாவின் உருவத்தை இட்லியாக சமைத்த போது துக்கம் நேரிட்டதாக தெரிவித்தனர்.
68 வயது அம்மாவுக்கு படையல்
ஜெயலலிதாவிற்கு 68 வயதாகிறது. இந்த வயதில் இவருக்கு மரணம் நேரிட்டதே என்ற சோகத்துடன் கடந்த சில நாட்களாக இருந்தோம். 16ஆம் நாள் காரியத்திற்காக இந்த இட்லியை சமைத்து படையலிட்டதாக கூறினர் சமையல் கலைஞர்கள்.
கடலில் கரைப்பு
ஜெயலலிதாவின் உருவம் பொறித்த இட்லியை வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் அதை கடலில் கரைத்தனர். அம்மாவின் புகழ் உலகம் முழுவதும் பரவும், உயிர் உள்ளவரை அவரது நினைவுகள் எங்களை விட்டு நீங்காது என்றும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.