ஜெ.மரண விசாரணை: சமையல்காரர், டிரைவர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
ஜெயலலிதா வீட்டு சமையலர் சேகருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 7ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகம் சாமி ஆணையம், போயஸ் கார்டன் வீட்டு சமையல்காரர், கார் டிரைவர் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.
அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்
இதனையடுத்து ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி கடந்த மாதம் தனது விசாரணையை தொடங்கினார். ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் தங்கியிருந்த இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பிய மாதவன், தீபா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
ஆஜராக ஆணை
இந்த நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கண்ணன், ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் ஜெயராமன், ஜெயலலிதாவின் சமையல்காரர் சேகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது.
இதனிடையே நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்தவாரம் நடைபெறவிருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மார்ச் 6ல் ஆஜராக உத்தரவு
இந்த நிலையில் கார் டிரைவர் கண்ணன் 6 ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும், வேதாநிலையம் வீட்டு சமையல்காரர் சேகர் 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விளக்கம் தர கெடு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் அளித்துள்ளது. இந்த ஆவணங்களை படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமானப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.