ஜெயலலிதா மர்ம மரணம்: விசாரணை ஆணையத்தில் 8 பேர் பிரமாண பத்திரம் தாக்கல்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் இதுவரை 8 பேர் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் உள்பட 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்று விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.
அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.
விசாரணையை தொடங்கிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை தகுந்த ஆவணங்களுடன் அளிக்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் உள்பட இதுவரை 8 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்று விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. நவம்பர் 22ம் தேதி மருத்துவர் சரவணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மற்றவர்களும் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும் என்றும் விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது.