ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பயனளிக்காது: தீபா
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பயனளிக்காது என்று தீபா பேசி உள்ளார்.
Recommended Video
கடலூர் : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் நடத்தி வரும் விசாரணை தேவையற்றது, ஏனென்றால் இவர்கள் எப்படியும் எந்த உண்மையையும் வெளியிடப்போவதில்லை என்று கடலூரில் நடந்த விழா ஒன்றில் தீபா பேசி உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அரசியலில் இறங்கினார் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா. எம்.ஜி.ஆர் தீபா அம்மா பேரவை என்கிற பெயரில் அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜெ.தீபா நேற்று பேரவையின் சார்பில் கடலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, ஜெயலலிதா விட்டுச்சென்ற நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை.
அண்ணா அவர்கள் எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தார். ஆனால் என்னை மக்களாகிய நீங்கள் அழைத்து வந்திருக்கிறீர்கள். உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. ஜெயலலிதாவின் தியாகத்தால் வலுப்பெற்றது. அவரது வழியில் மக்களுக்காக பணியாற்றுவதே என்னுடைய லட்சிய பயணமாக இருக்கும். என்னுடைய அரசியல் பயணம் மக்களுக்கானதாக இருக்கும்.
விரைவில்ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுத இருக்கிறேன். அதுவும் அந்த பணியை அவரது பிறந்த நாளில் தொடங்க இருக்கிறேன். அதில் தற்போது மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிவரும். அதை யாரும் தடுக்க முடியாது.
சினிமாவில் வருவதுபோல் யாரும் ஒரே நாளில் முதல் அமைச்சர் ஆகிவிட முடியாது. அ.தி.மு.க.வையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், உண்மையில் இந்த விசாரணை கமிஷன் தேவையே இல்லை. ஏனென்றால் எப்படியும் உண்மை வெளிவராது. விசாரணை கமிஷன் தற்போது தேவையில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை நிலையை தமிழக அரசு வெளியிடவில்லை. அதற்கு நீங்கள் வழக்கு தொடர வேண்டியது தானே என்று சிலர் கேட்டார்கள். நான் வழக்கு தொடர்ந்தால் மட்டும் நியாயம் கிடைக்குமா? உண்மை வெளிவருமா? அதற்கும் தடை ஏற்படுத்துவார்கள். ஆக, அந்த தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டு எடுப்பதே எனது ஒரே லட்சியம் என்று ஜெ.தீபா பேசினார்.