திருநாவுக்கரசர் திடமான மனநிலையில் இருக்கிறாரா? - ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம் என்று கூறும் திருநாவுக்கரசர் திடமான மனநிலையில்தான் இருக்கிறாரா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது குறித்து கருத்து கூறிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை கறுப்பு அறிக்கை எல்லாம் வெளியிடத் தேவையில்லை என்று கூறினார்.
இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை என திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கூட இன்னமும் நடந்து வருகிறது. என்ன நடந்தாலும் ராஜீவ் காந்தி உயிரோடு வரப்போவதில்லை. அதனால் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை தண்டிக்க வேண்டாம் எனக் கூற முடியுமா? வெள்ளை அறிக்கை வேண்டாம் என தனது சொந்தக் கருத்தையே திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார் என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திரும்பி வரப்போவதில்லை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பேசிய திருநாவுக்கரசர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்து பல்வேறு விவாதங்களை செய்வதால், மறைந்த ஜெயலலிதா திரும்பி வரப்போவது இல்லை என்கிற அந்த வருத்தத்தில்தான், ஜெயலலிதா மறைவு குறித்து வெள்ளை அறிக்கை தேவையில்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தேன்.
காங்கிரஸ் கட்சியின் கருத்துதான்
நான் சொல்வதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கருத்தாகத்தான் இருக்கும். அந்தக் கருத்து கட்சியின் கருத்தா இல்லையா என்று கருத்து தெரிவிக்கும், விமர்சிக்கும் அதிகாரம், தகுதி கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் போன்றவர்களுக்குத்தான் இருக்கிறது. வேறு யாருக்கும் கிடையாது.
மனநிலை சரியில்லாதவர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை, உடல்நலக் குறைவால் மறைந்த முன்னாள் முதல்வரின் இறப்புடன் தொடர்புபடுத்தக் கூடாது. அப்படி தொடர்புபடுத்திப் பேசுவோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கூறினார். இது ஈவிகேஎஸ் இளங்கோவனை குறிப்பிட்டு பேசியதுதான் என்று சர்ச்சை எழுந்தது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி
திருநாவுக்கரசரின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் திடமான மனநிலையில் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளை அறிக்கை வேண்டாம் என்று கூறியது எப்படி காங்கிரஸ் கட்சியின் கருத்தாகும்? பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி கேட்டாரா என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுள்ளார்.
கருத்தை ஆதரிக்கிறாரா?
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதோ அதிமுகவில் இருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று கூறுவது எப்படி சரியாகும். பாஜகவில் இருந்ததால் மோடியின் கருத்தை ஆதரிப்பாரா என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது அறிக்கையில் கேட்டுள்ளார். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் அறிக்கைகளுக்கு எல்லாம் தான் பதிலளிக்க தேவையில்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.