ஜெயலலிதா மறைவு பற்றி பரப்பப்படும் அனைத்தும் திட்டமிட்ட வதந்தி - வைகோ
ஜெயலலிதா மரணம் குறித்த அப்பல்லோ அறிக்கை சரியானது தான் என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பரப்பப்படும் அனைத்து கருத்துக்களும் சிலரால் பரப்பப்படும் திட்டமிட்ட வதந்தி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது உடல்நிலை குறி்தது அவ்வப்போது வெளிவரும் அறி்க்கைகள் மட்டுமே அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தது.
இதனிடையே 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், மாராடைப்பு ஏற்பட்டு டிசம்பர் 5ம் தேதியன்று ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், அப்பல்லோ மருத்துவமனை பற்றியும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் இப்போது பரப்பப்பட்டு வருகின்றன. நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை கிளப்பியது.
இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையே உண்மையானவை. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிராதப் ரெட்டியிடம் அது குறித்து நானே கேட்டறிந்தேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பரப்பப்படும் அனைத்து எதிர்மறை கருத்துக்களும் சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி தான். இவ்வாறு வைகோ கூறினார்.