கடலூரில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 5 அமைச்சர்கள்; 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முகாம்: ஜெ.
சென்னை: மழை வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு 5 அமைச்சர்கள், 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பருவமழை நிலவரம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், கே.ஏ.ஜெயபால், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டார். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் 8, 9 ஆகிய 2 நாட்களில் மட்டும் 266 மி.மீ மழை பெய்துள்ளது.
அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 5 அமைச்சர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் சுமார் 29 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 100 வல்லங்களில் 40 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகம் சீர்செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.