கன்னத்தில் அடித்த விவகாரம்.... சசிகலா புஷ்பா புகாருக்கு ஜெ., விளக்கம் தர ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: தம்மை கன்னத்தில் அடித்ததாக அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் வெளிப்படையாக தெரிவித்த புகாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ராஜ்யசபாவில் பேசிய அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா தம்மை அறைந்தார்; எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மிரட்டினார் எனக் கூறியிருந்தார். இதனால் உடனடியாக அதிமுகவில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னையில் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:
கேள்வி: அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா தன்னை முதல்வர் ஜெயலலிதா தாக்கியதாகவும், எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு, எனவே தனக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?
ஸ்டாலின்: தனக்கு பாதுகாப்பு இல்லை என சொன்னது அதிமுகவின் எம்.பி., அதை சொன்ன இடம் நடுரோட்டிலோ, முச்சந்தியிலோ நின்று அவர் சொல்லவில்லை, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக யார் மீது புகார் தெரிவித்து இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தனது கன்னத்தில் அறைந்தார் என்று வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவித்து பதிவு செய்திருக்கிறார்.
இதில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கக்கூடியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. எனவே அவர்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். ஆகவே பத்திரிகையாளர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா இருக்கக்கூடிய போயஸ் தோட்டத்திற்கு சென்று, இதுகுறித்த அவரது விளக்கங்களை கேட்டு, உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.