பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சகோதரத்துடன் வாழ வேண்டும் - ஜெ., ஓணம் வாழ்த்து
சென்னை: ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்து கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தி:
திருவோணத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபலி மன்னனின் அகந்தையை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களை காண வரம் கொடுத்தார். அதன்படி மக்களை காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.
மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி போன்ற நடனங்களை ஆடி, கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.
திருவோணத் திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.