ஊழல் வழக்கில் பதவி இழந்த "முதல்" "முதல்வர் ஜெயலலிதா"
1991-96 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில் ரூ1 ஊதியமாக பெற்றார் ஜெயலலிதா. ஆனால் இந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்தார் என்று சென்னை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து பின்னர் வந்த திமுக அரசு காலத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் விசாரணை 2000ஆம் ஆண்டே முடிவை எட்டியது.
ஆனால் 2001ஆம் ஆண்டு மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கை இழுத்தடிக்கும் வேலைகள் ஜரூராக நடைபெற்றன. இப்படி 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில்தான் நேற்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
- இந்தியாவிலே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட 18 ஆண்டுகளாக நீடித்து முடிவுக்கு வந்தது என்பது இதுவே முதல்முறை.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்பது இதுவே முதல்முறை.
- ஒரு வழக்கில் அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறை.
- முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பதவி இழந்த முதலாவது முதல்வர் ஜெயலலிதா.
- இந்திய அளவில் நீதிமன்ற தீர்ப்பினால் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு ஆளான முதலாவது அரசியல்வாதி ஜெயலலிதா.
- இந்தியாவிலேயே ஊழல் வழக்குகளால் 2 முறை பதவியை பறிகொடுத்தவரும் ஜெயலலிதாவே.