சட்டசபை தேர்தல்... உள்ளடி வேலைகள், துரோகத்தை சகிக்க முடியவில்லை: செயற்குழுவில் ஜெ. ஆவேசம்
சென்னை: சட்டசபையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் 98 இடங்களைப் பிடித்தது கட்சியினரின் உள்ளடி வேலைகளால்தான்... தம்மால் துரோகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அதிமுக செயற்குழுவில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஆவேசமாக பேசியுள்ளார்.
அதிமுகவின் செயற்குழு பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று கூடியது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கலந்துகொள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவருடன் சசிகலாவும் வந்திருந்தார் . ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்களைப் பார்த்து மாடியில் நின்று ஜெயலலிதா கை அசைத்தார். அப்போது தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பின்னர் கூட்ட அரங்கத்துக்கு ஜெயலலிதா சென்றார்.
அடிமட்ட தொண்டருக்கும் வாய்ப்பு
இச் செயற்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது:
நான் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சீட் கொடுத்து தேர்தல் செலவுக்கு பணமும் கொடுத்தேன். மற்ற கட்சிகளில் பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுக்கிறார்கள்.
பணத்தை பதுக்கிய மா.செ.க்கள்
இப்படி வேட்பாளர்களுக்கு கொடுத்த பணத்தை பல மாவட்ட செயலாளர்கள் பதுக்கி விட்டனர். வேட்பாளர்களில் சிலரும் கூட பணத்தை செலவு செய்யவில்லை. தங்கள் மாவட்டத்தில் வேறு யாரும் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி கிடைக்காமல் போகலாம் என்ற எண்ணத்தில் மற்றவர்களைத் தோற்கடிக்கவும் சிலர் பாடுபட்டுள்ளனர்.
திமுகவுடன் ஒப்பந்தம் போட்ட மா.செ.
இப்படி செயல்பட்ட சிலரை வேறு வழியில்லாமல் அமைச்சராக்கி உள்ளேன். ஒருவரை மாவட்ட செயலராக்கினேன். அவரோ தி.மு.க., மாவட்ட செயலருடன் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு வருகிறார்.
மா.செ.க்களின் லட்சணம்
ஒரு மாவட்ட செயலர் தன் மாவட்டத்தில் மற்றவர்களை தோற்கடிக்க வேலை பார்த்து விட்டு அவர் மட்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளார். ஒரு மாவட்ட செயலர் மாவட்டத்தில், நம் கட்சியினரை தோற்கடிக்க பணம் கொடுத்துள்ளார். லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்த நமக்கு சட்டசபையில் 217 தொகுதிகள் கிடைத்திருக்க வேண்டும்.
துரோகத்தை சகிக்க முடியவில்லை...
ஆனால் 98 இடங்களில் எதிர்க்கட்சியினர் அமர்ந்துள்ளனர். இதைப் பார்த்து உங்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது? எல்லாம் நம் கட்சியினர் செய்த உள்ளடி வேலைகள், துரோகம்தான்.... அவர்கள் 98 பேர் அமர்ந்திருப்பது உங்களை உறுத்தவில்லையா? என்னால் துரோகத்தைச் சகித்துக் கொள்ள முடியவில்லை... உள்ளாட்சித் தேர்தலில் நாம் வென்றாக வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.