முதலில் நிதி... அப்புறமா கூட்டணி... டெல்லி விசிட்டில் 'கறார்' காட்டிய ஜெ
சென்னை: ஜெயலலிதா டெல்லிக்கு போறாங்க... அப்படியே பாஜக கூட்டணியில சேருவாங்க, அமைச்சரவையில அதிமுக இடம்பிடிக்கும் என்றெல்லாம் ஊடகங்களில் ஊக செய்திகள் வெளியானது. ஆனால் ஜெயலலிதாவோ, பிரதமர் மோடியை சந்தித்து 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய 96 பக்கங்களில் மனுவை கொடுத்து விட்டு கூடுதல் நிதியை கேட்டு வந்துள்ளார்.
தமிழக பாஜகவினர் ஆளும் கட்சியையும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்தாலும் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களும், பிரதமர் மோடியும், ஜெயலலிதாவிடம் நட்பு பாராட்டியே வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்றதற்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றதற்காக ஜெயலலிதாவுக்கு மோடியும் வாழ்த்து தெரிவித்தார்.
இதன்பின்னர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசி கோரிக்கை மனு அளித்தார் ஜெயலலிதா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்த பிரதமர் மோடி போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று பேசினார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடந்த 14ம் தேதி டெல்லி சென்று மீண்டும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்துள்ளார் ஜெயலலிதா. கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இருவரும் சந்தித்து பேசி உள்ளனர்.
ஜெயலலிதா பயணம்
ஜெயலலிதாவின் டெல்லி பயணம் கடந்த ஒரு வார காலமாகவே ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. டெல்லி சந்திப்புக்கான ஏற்பாடுகளை துணை சபாநாயகர் தம்பிதுரை மேற்கொண்டார். முதல்வருடன் சசிகலா, முதல்வரின் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தனி விமானத்தில் டெல்லி சென்றனர்.
வாழ்த்தும் நன்றியும்
பிரதமரின் இல்லத்துக்கு வந்த முதல்வரை கண்டமாத்திரத்தில் பிரதமர் வாழ்த்துக்கள் என்று ஹிந்தியில் கூற முதல்வரும் நன்றி என்று என்று ஹிந்தியிலேயே பதில் கூறினார்.
பச்சை நிறமே.. பச்சை நிறமே...
தனக்கு ராசியான பச்சை நிற சால்வையையும், வெள்ளை, சிகப்பு ரோஜாக்கள் நிறைந்த பச்சை நிற பொக்கேயை பிரதமருக்கு முதல்வர் அளித்தார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் குறித்தும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசிய முதல்வர், தான் கொண்டுவந்திருந்த 29 கோரிக்கைகள் அடங்கிய 96 பக்க மனுவை, மோடியிடம் கொடுத்தார்.
19 கோரிக்கைகள்
இந்த 29 கோரிக்கைகளில் 19 கோரிக்கைகள் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருபவைதான். எனவேதான் 'பழைய மொந்தையில் புதிய கள்' என்று கமெண்ட் அடித்தார் கருணாநிதி. ஜெயலலிதா அளித்த கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றில் நிதிதான் பிரதானமாக இடம்பெற்று இருந்தது.
சம்மதம் சொன்ன ஜெ
தமிழக அரசு கேட்ட நிதியை வழங்கி அந்தத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற சிறப்புப் பணிக்குழு அமைக்கலாம். அதன்மூலம் திட்டங்களை விரைவாக முடிக்கலாம் என்று மோடி கூறிய ஐடியாவுக்கு ஜெயலலிதா சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
பாஜகவினர் உற்சாகம்
நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்தும் அதில் அதிமுகவின் பங்களிப்பு குறித்தும் மோடி சுட்டிக்காட்டிய விஷயங்களை முதல்வர் ஏற்றுக்கொண்டாராம்.முதல்வரின் டெல்லி பயணம், பிரதமருடனான சந்திப்பின்போது காட்டிய உற்சாகம் போன்றவை பாஜகவினருக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.