முதல்வர் உணவு உண்ணும் அளவுக்கு தேறிவிட்டார்: அப்பல்லோவில் காதர் மொய்தீன் பேட்டி
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா உணவு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தேறி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எங்களிடம் தெரிவித்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும் நிபுணர்கள் குழுவில் உள்ள பிற மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேவையான சுவாச உதவி, நோய் எதிர்ப்பு ஆன்ட்டி பயாடிக் சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் பிற ஆதரவுச் சிகிச்சைகள் உட்பட பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் திங்கட்கிழமையன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஜெயலலிதா உணவு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தேறி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்ததாக காதர் மொய்தீன் கூறினார். மேலும் தமிழக மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் விரைவில் குணமடைவார் என அவர் தெரிவித்தார்.