அப்பல்லோஅப்பல்லோவில் ஜெ., அமைதியாக நடந்த அவில் ஜெ., அமைதியாக நடந்த அதிமுகவின் 45வது தொடக்க நாள் விழா
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 45வது ஆண்டு தொடக்க நாள் விழா இன்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு விழா தொடக்க நாள் மலரும் வெளியிடப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் நாள் முதல் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 45ஆவது ஆண்டு இன்று தொடங்குகிறது. இதனையொட்டி சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையிர் அமைந்துள்ள தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனத் தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு, அவைத் தலைவர் இ. மதுசூதனன், மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து தொடக்க நாள் மலரை வெளியிட்டார்.
முதல் பிரதியை நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. எஸ். அன்பழகன் பெற்றுக் கொண்டார். அதிமுகவை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நாட்டின் மிக பெரிய அரசியல் இயக்கமாக மாற்றியுள்ளார் என, நிகழ்ச்சியில் பங்கேற்ற கழக செய்தி தொடர்பாளர் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் திரளாக பங்கேற்றனர்.
தமிழகத்தில் கொண்டாட்டம்
அ.இ.அ.தி.மு.க.வின் 45வது ஆண்டு தொடக்க விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் இன்று கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரையில் கொண்டாட்டம்
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அவைத் தலைவர் தலைமையின்கீழ், ஏராளமான கழகத் தொண்டர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதில் மகளிர் அணையினர் வழக்கறிஞர் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கலந்துகொண்டனர். மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் கழகக் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடலூர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து கொடி ஏற்றி கொண்டாடினர்.
அதிமுக பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் மேயர் சாவித்ரி கோபால் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அதிமுக தொடக்க நாள் விழா வழக்கமாக விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறையில் இருந்ததால் அமைதியாக விழா கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு கொடநாடு சென்றிருந்த ஜெயலலிதா, கோத்தகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். 3 நாட்கள் விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் கருதி எளிமையாக நடைபெற்றது.