'ஏக் மார் தோ துக்கடா': இது ஜெயலலிதாவின் அரசியல் அதிரடி
சென்னை: குளுகுளு கொடநாட்டில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை வந்தாலும் வருகிறார், அரசியல் காட்சிகளில் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. தேர்தலுக்கு பிந்தைய ராஜதந்திர நடவடிக்கைகளை ஜெயலலிதா இப்போதே துவக்கிவிட்டார்.
அனல் பறக்குது..
இரு வாரங்கள் கொடநாட்டில் ஓய்வெடுத்த ஜெயலலிதா இன்று மதியம் சென்னை திரும்புகிறார். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ரிசல்ட் வந்துவிடும் என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அவர் ஆயத்தமாகிவிட்டார். இதனால் அரசியல் ஜுரம் அதிமுக வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது.
சும்மா இருப்பாரா அம்மா..
எக்சிட் போலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டாலும், அதை நம்பிக்கொண்டு சும்மா உட்கார விரும்பவில்லை ஜெயலலிதா. சில டிவிக்களில் பாஜக அணி அறுதிப் பெரும்பான்மை பலத்துக்கு 20 சீட்டுகளாவது குறைவாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளதை கவனத்தில் வைத்துக் கொண்டுள்ளார். அப்படி சீட்டுகள் தேவைப்படும்பட்சத்தில், நரேந்திர மோடியுடனான நட்பை பயன்படுத்தி பாஜக அணிக்கு ஆதரவு அளித்து மத்திய அரசில் அங்கம்வகிக்கவே ஜெயலலிதா விரும்புவார் என்கிறார்கள்.
மோடியா, லேடியா?
பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிவரலாம் என்பதை உணர்ந்துதான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதாவோ, அதிமுகவோ பாஜக அல்லது மோடியை தாக்கி பிரச்சாரம் செய்யவில்லை. திமுகவும் பிற கட்சிகளும் அதையே சுட்டிக்காண்பித்து விமர்சனம் செய்ததால், கடைசி நேரத்தில் 'மோடியை விட இந்த லேடிதான் சிறந்த நிர்வாகி' என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வேண்டிவந்தது. இருப்பினும் பாஜகவின் கொள்கைசார்ந்த விஷயங்களை பிரச்சாரத்தின்போது பேசாமல் ஜெயலலிதா 'சாய்சில்' விட்டுவிட்டார்.
சிம்ம சொப்பனம்
வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவு அளித்ததும், அதன்பிறகு மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரித்தது வாஜ்பாயை புலம்ப செய்ததும்தான், அதிமுகவின் ஆதரவை பாஜக பெறுவதற்கு தயங்கும் காரணம் எனக் கூறப்படுகிறது.
பத்திரிகையாளரின் பங்கு
இந்த தயக்கத்தை போக்குவதில் தமிழகத்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரான ஒருவர் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனது வார இதழில் நரேந்திர மோடி அல்லது ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருந்தார். பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாசகர்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுத்தவர்.
வாய்ப்புள்ளது
பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க ஒடிசாவின் பிஜுஜனதாதளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்டவையும் தயாராக இருக்கும் என்றே தெரிகிறது. எனவே அவர்கள் ஆதரவையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அதிமுக- பாஜக இடையே தேர்தல் உடன்பாட்டை எட்டச்செய்வதில் தமிழக பத்திரிகையாளருக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆர்எஸ்எஸ்சும் இந்த கூட்டணியை விரும்பலாம் என்று தெரிகிறது. எனவே பாஜக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டால் ஆட்சியில் பங்கெடுக்க அதிமுகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கும் தயார்
ஒருவேளை பாஜக மற்றும் காங்கிரஸ் அணிகள் பெரும்பான்மை பலத்துக்கு தேவையான இடங்களைவிட வெகுகுறைவாக பெற்றால், அதில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும் ஜெயலலிதா கவனமாக இருக்கிறார். இதற்காக மூன்றாம் அணி எனப்படும் மாற்று அணி கட்சிகளுடனும் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கவும் அதிமுக ஆயத்தமாக இருக்கிறது.
மூன்றாம் அணி
எக்சிட் போல் கணிப்புகள் பலவற்றிலும், காங்கிரஸ், பாஜக அல்லாத பிற கட்சிகள் 150 சீட்டுகளுக்கும் அதிகமாக வெல்லக்கூடும் என்று கூறப்பட்டுள்ளதையும் அதிமுக கவனித்துக்கொண்டுதான் உள்ளது. இந்த மாற்று அணி கட்சிகளிலும்கூட, அதிமுகதான் மிக அதிகபட்சமாக 25 முதல் 30 சீட் வரை வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்கே மெரிட்
மாற்று அணிகள் இணைந்து ஒரு அரசமைத்தால், அதிக தொகுதிகளை வென்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் அதாவது மெரிட் அடிப்படையில் ஜெயலலிதாவே பிரதமராக வாய்ப்பு ஏற்படும்.
மம்தா முட்டுக்கட்டை
மூன்றாவது அணிகள் இணைந்து ஆட்சியை பிடிப்பதில்தான் சிக்கலே உள்ளது. மூன்றாவது அணி அமைக்க முன்முயற்சி எடுப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரகாஷ் காரத். ஆனால் அந்த கட்சியும் மம்தாவின் திரிணாமுலும், நம்மூரில் திமுகவும், அதிமுகவும் போலத்தான். இரண்டும் ஒரே பக்கம் இணையாது. கம்யூனிஸ்டுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், மம்தா பானர்ஜி, தேவகவுடா, மாயாவதி, முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார், ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் ஆகியோரின் கட்சிகள் பலத்துடன்தான் ஆட்சியமைத்தாக வேண்டும். அதிமுக மற்றும் பிற கட்சிகள் சேர்ந்து 272 தொகுதிகளை கைப்பற்றுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு அளித்தால்..
தமிழகம், கர்நாடகா, உ.பி, பிகார், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களிலுள்ள அத்தனை தொகுதிகளையும் மூன்றாம் அணியிலுள்ள கட்சிகள் கைப்பற்றினால்தான் அவர்கள் இணைந்து ஆட்சியமைக்க முடியும். ஆனால், காங்கிரஸ் இந்த அணிக்கு ஆதரவளிக்க முன்வந்தால், ஆட்சியமைப்பது எளிதாகிவிடும். அப்போதும் ஜெயலலிதா பிரதமாரவது சாத்தியமாகும். எனவே மூன்றாம் அணி திட்டத்தையும் ஜெயலலிதா விடப்போவதில்லை. அதற்கான பூர்வாங்க வேலைகளிலும் சென்னையில் இருந்தபடி ஈடுபடுவார் என்கிறார்கள் அதிமுகவினர்.
ஏக் மார் தோ துக்கடா
ஒருபக்கம் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் நல்ல துறைகளை பெறலாம். அப்படியில்லாவிட்டால், மூன்றாவது அணி மூலமாக பிரதமராகி நாட்டையே ஆளலாம். பாஜக கூட்டணி அறுதிபெரும்பான்மை பெற்றால் மட்டுமே, ஜெயலலிதாவின் அரசியல் திட்டங்கள் பலிக்காமல் போகும். ஜெயலலிதாவின் யோகம் எப்படி இருக்கிறது என்பது 16ம்தேதி தெரிந்துவிடும்.