தாய்ப்பால் புகட்டு அறை.. தமிழகம் முழுவதும் 315 பேருந்து நிலையங்களில் திறப்பு!
சென்னை: சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்பட மாநிலம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படுள்ளன.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அறையில், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெப்பம் தாக்காத சூழல், மின்விசிறிகள், கழிவறை வசதி, கைகளைக் கழுவ தனிஇடம், குளிர்ச்சி தங்கும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்ட தரை, தாய்மார்கள் அமர குஷன் இருக்கை, அமர்ந்து தாய்ப்பால் புகட்ட தனித் தனித் தடுப்புகள், இரும்பினால் ஆன குப்பைக் கூடை, சுத்தமான குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு தனி அறை திறக்கப்பட்டுள்ளது. அந்த அறைகளில் மின்விசிறிகள், கழிவறை வசதிகள்-நவீன ஓடுகள் பதிக்கப்பட்ட தரை, 4 அல்லது 5 ஜோடி இரும்பு இருக்கைகள், இரும்பினால் ஆன குப்பைக் கூடை சுத்தமான குடிநீர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.