'சும்மா'வாகிப் போன அம்மாவின் "அதிமுக தனித்துப் போட்டி" கோஷம்- மூன்றாவது அணியில் கரைந்து போனது!!
சென்னை: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்ற ஜெயலலிதாவின் "நீண்டகால" கோஷம் புஷ்வானமாகி இப்போது இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடும்.. ஜெயலலிதாதான் பிரதமர் வேட்பாளர் என்பது அதிமுகவின் ஒவ்வொரு மேடைகளிலும் ஒலித்த முழக்கம்.
ஆனால் இந்த முழக்கங்களுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் ஜெயலலிதா.
டெல்லியில் ஜெ. சொன்னது..
கடந்த ஆண்டு திட்டக் குழு கூட்டத்துக்கு டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வருகின்ற லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று அறிவித்திருந்தார்.
பொதுக்குழு தீர்மானம்
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தனித்துப் போட்டிதான் என்று தீர்மானமும் கூட நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் ஜெ. பேச்சு
மேலும் பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதாவும், "நாம் யாரையும் சார்ந்து இருக்க முடியாது. வேறு எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். அவர்கள் தேசிய கட்சியை சார்ந்து இருக்கலாம்.தேசிய அரசியலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகள் உள்ளன.
சில கட்சிகள் காங்கிரசோடும், சில கட்சிகள் பாரதிய ஜனதாவோடும் கூட்டு சேருகிறது. ஆனால் அ.தி.மு.க. தனித்தே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. நாம் பாரதிய ஜனதா, காங்கிரசை வரும் தேர்தலில் சார்ந்திருக்க முடியாது. தமிழகத்தின் உரிமையை பெற காவிரி டெல்டா பாலைவனம் ஆனதை தடுக்க வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியில் வெற்றி பெற்று மத்தியில் நாம் சென்று அதிகாரத்தை உருவாக்கி கொள்ள முடியும் என்றார்.
நேற்று இந்திய கம்யூனிஸ்ட்
ஆனால் அதிமுகவின் இந்த தனித்துப் போட்டி வைராக்கியம் இப்போது கரைந்துபோய்விட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் ஜெயலலிதா.
இன்று சிபிஎம் - கூட்டணி?
மேலும் இன்று மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடுகிறார் ஜெயலலிதா.
சும்மாவான கோஷம்
இதனால் இத்தனை காலமாக அதிமுக முன் வைத்த தனித்துப் போட்டி என்ற கோஷம் சும்மாவாகிப் போனது என்பதே யதார்த்தம்.
எத்தனை தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் இடம் பெற்றாலும் கூட அதிகபட்சமாக இரண்டு கட்சிகளுக்கும் தலா இரு இடங்கள் வரைதான் அதிமுக முன்வரும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்து என்ன?
இடதுசாரிகளுடன் ஜெயலலிதா கை கோர்த்திருப்பதன் மூலம் "மூன்றாவது அணிக்குள்ளும்" நுழைந்திருக்கிறது அதிமுக. இனி மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக இடதுசாரிகளால் ஜெயலலிதா முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.