37 எம்பிக்கள் இருந்தாலும்.. டெல்லியில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் ஜெயலலிதா!
சென்னை: தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஜெயலலிதாவை பிரதமராக்கும் முயற்சி கானல் நீராக போய்விட்டது. நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள அதிமுகவுக்கு அந்த பலத்தை வைத்து எதையும் செய்ய முடியாமல் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன.
நாற்பதும் நமதே..
நாற்பதும் நமதே என்ற கோஷத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் ஜெயலலிதா. தொடர்ந்து 10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு கண்ணில் விரலை விட்டு ஆட்டிய திமுகவை மீண்டும் டெல்லி பக்கம் போகவிடக்கூடாது என்பது மட்டும் அந்த கோஷத்தின் நோக்கமில்லை. அதிகாரம் செலுத்த வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவே அமர வேண்டும் என்ற எண்ணம்தான் நாற்பதை நோக்கிய பாதை. ஜெயலலிதா இதை வெளிப்படையாக கூறாவிட்டாலும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு அது ஒன்றே நோக்கமாக இருந்தது.
நன்மைகள் கொட்டும்..
தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தால், தமிழ்நாட்டுக்கு பல நன்மைகளை பெற்றுத்தருவேன் என்று ஜெயலலிதா பேசி வந்தார். மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்னை போன்றவற்றில் தமிழகத்துக்கு நியாயம் பெற்றுத்தர முடியும் என்று ஜெயலலிதா தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிட்டார். இன்னும் சொல்லப்போனால் வேறு கட்சிகளுக்கு ஓட்டுபோடுவதே வேஸ்ட் என்றும் பிரச்சாரம் செய்தார். மத்தியில் ஒன்று அதிமுக ஆதரிக்கும் கட்சி ஆட்சி நடக்க வேண்டும், அல்லது, அதிமுகவை பிற கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வாக்காளர்கள் வந்தனர்.
தூண்டிவிட்ட மம்தா
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிகளும் ஆட்சியமைக்க தேவையான சீட்டுகளை பெறமுடியாமல் இருந்தால், மூன்றாவது அணி அமைத்து அதன் மூலம் பிரதமராக ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு இருந்தது. பிராந்திய கட்சிகளிலேயே அதிமுகதான் அதிக சீட்டுகளை பெற வாய்ப்பிருந்ததும் ஜெயலலிதாவுக்கும் தெரிந்தே இருந்தது. ஜெயலலிதாவுக்கு போட்டி என்றால் அது மம்தாதான். மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களை பிடித்துள்ளது. பிரதமர் பதவிக்கு போட்டி என்று வந்தால் அதில் ஜெயலலிதாவும், மம்தாவும்தான் முன்னிலையில் இருப்பார்கள். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போதே, ஜெயலலிதா பிரதமராக ஆதரவு அளிப்பேன் என்று கூறி போட்டியில் இருந்து விலகிக்கொண்டார் மம்தா.
மலையேறிய மலைச்சாமி
ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட மூன்றாம் அணியுடன் சேர்ந்து காங்கிரசின் ஆதரவுடன் பிரதமராக ஜெயலலிதாவுக்கு சிறப்பான வாய்ப்பு இருந்தது. இவையெல்லாம் நடக்க பாஜக பெரும்பான்மைக்கு சற்று குறைவான சீட்டுகளை பெற்றால் மட்டும் போதுமாயிருந்தது. மதச்சார்புள்ள பாஜக ஆட்சியமைக்க விடமாட்டோம் என்று கோஷமிட்டுக் கொண்டே மூன்றாம் அணியை திரட்டி எளிதில் ஆட்சியமைத்திருக்க முடியும். இந்த நோக்கத்துக்காகத்தான், "பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போகிறோமே..." என தம்பட்டம் அடித்த மலைச்சாமி, மலையேற்றப்பட்டார். பின்னே... இவர் பாட்டுக்கு இப்படி சொன்னால், மூன்றாம் அணியில் நம்மை மதசார்பற்ற தலைவர் என்று எப்படி ஒப்புக்கொள்வார்கள் என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருக்கத்தானே செய்யும்.
50-50
"மூன்றாம் அணி...", "பிரதமர் பதவி.." என்று வாய்க்குள் மந்திரம்போல முனுமுனுத்துக்கொண்டே, தமிழக அமைச்சர்கள் ராப்பகல் பாராமல் கண் விழித்திருந்து வாக்காளர்களை அணுகி வாக்கு சேகரித்தனர். எப்படியும் தங்கள் தலைவியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்வேகம் அவர்கள் செயல்பாட்டில் தெரிந்தது. அமைச்சர்கள் ஆசையில் பாதிதான் நிறைவேறியுள்ளது. அதிமுக வெற்றி பெற்றுவிட்டது, ஆனால் ஜெயலலிதா பிரதமராக டெல்லி போகப்போவதில்லை.
அடுத்த பிரதமர்..
வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது முதல் தமிழகத்தில் ஒன் மேன் ஷோவாக அதிமுகதான் முன்னணியில் சென்று கொண்டிருந்தது. தமிழ் தொலைக்காட்சிகளிலும், இணையதளத்திலும் இதை பார்த்துக்கொண்டிருந்த அதிகமுகவினர், 'அடுத்த பிரதமர் அம்மா வாழ்க' என்று மனதுக்குள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் முகங்களில் சூரிய பிரகாசம் ஒளிர்ந்தது. ஆனால் பக்கத்திலேயே அகில இந்திய டிரெண்ட் என்று ஒரு கட்டம் போட்டு அதில் பாஜக கட்டம் கட்டி ஆடிக்கொண்டிருந்ததை எட்டிப்பார்த்தபோது, அவர்கள் மனதில் என்ன தோன்றியிருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
மகிழ்ச்சி... ஆனா..
கிட்டத்தட்ட தமிழகத்தில் கிளீன் ஸ்வீப் எனப்படும் மொத்த தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 2 தொகுதிகள் மட்டும் பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளது. ஆனால் இந்த வெற்றியால் நினைத்தது நடக்கவில்லை. இதைத்தான் எதற்கும் ஒரு யோகம் வேண்டும் என்று சொல்வார்கள் போல உள்ளது. ஜெயலலிதாவே எதிர்பாராதவிதமாக நாடு முழுவதும் சுழன்றடித்த மோடி சுனாமி, அதிமுகவினரின் கனவு கோட்டையை 'ஸ்வாகா' செய்துவிட்டது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராவார் என்று ஆசைப்பட்டு வாக்களித்தோருக்கும் இது ஏமாற்றமே. போயஸ் கார்டனுக்கு வந்து வாழ்த்து சொன்னவர்களிடம், மகிழ்ச்சிதான், ஆனால் இல்லை என்று ஜெயலலிதா கூறிவருவதாக அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.
திமுக போட்ட ஆட்டம்..
18 எம்பிக்களை வைத்துக் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசில் பங்கேற்று, பல அமைச்சர் பதவிகளைப் பெற்று, மத்திய அரசை ஆட்டிப் படைத்து பெரும் லாபம் அடைந்தது திமுக. ஆனால், இப்போது 37 எம்பிக்கள் இருந்தும் கூட மத்திய அரசை ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது அதிமுக.
இனி ஒரே சான்ஸ்தான்
எம்ஜிஆர் காலத்திலேயே செய்யாத ஒரு சாதனையை அதிமுகவின் வெற்றி சாத்தியப்படுத்தியுள்ளது. இனிமேல் இப்படியொரு வெற்றி அதிமுகவுக்கு கிடைக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது. வாராது வந்த மாமணியாய் கிடைத்த இந்த அபார வெற்றி, வெறும் புகழ்ச்சிக்கு மட்டுமே பயன்படுகிறதேயன்றி, நினைத்த காரியத்தை முடிக்க அல்ல. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதை அதிமுகவுக்கு. இப்போது அதிமுக முன்பு இருக்கும் ஒரே சந்தர்ப்பம், ராஜ்யசபாவில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெறுவதுதான். ஏமாற்றத்தில் இருந்து வெளிவர சற்று காலதாமதம் ஆனாலும், அந்த வாய்ப்பையும், பறித்துக்கொண்டு போக பிஜு ஜனதாக்களும், ஓய்எஸ்ஆர்களும் காத்துக் கொண்டுள்ளன.