எதிர்க்கட்சிகளுக்கு விரைவில் ஆப்பு... மது விலக்கு தொடர்பாக விரைவில் ஜெயலலிதா அதிரடி முடிவு?
சென்னை: மது விலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களிடம் நல்ல பெயர் வாங்க ஆரம்பிப்பதற்கு முன்பு முந்திக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா செயல்படுவார் என்று விஷயம் அறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களுக்கு முன்பு மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்தி அத்தனை பேரையும் ஜெயலலிதா ஓரம் கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக தனது ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல லட்சம் தாய்மார்களை கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி வரும் மதுப் பிரச்சினையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் மதுப் பிரச்சினை தலைவிரித்தாடி, மக்கள் பெரும் வேதனையில் மூழ்கியிருக்க, அரசியல் கட்சிகளோ வழக்கம் போல இதில் வாயாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக என்ன செய்யப் போகிறது
இந்த நிலையில் மறைமுகமாக எதிர்க்கட்சிகள் மூலமாக அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது அதிமுக அரசு உள்ளது. இதனால் அதுகுறித்த சிந்தனையில் ஜெயலலிதா இறங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கடைகளைக் குறைக்க முடிவு
இதை படிப்படியாக செயல்படுத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி முதலில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், பிறகு கடை திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.
விரைவில் நேரம் பாதியாக குறையும்
அதன்படி டாஸ்மாக் கடைகளின் செயல்படும் நேரம் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி என குறைக்கப்படவுள்ளதாம். மேலும் சாதாரண கடைகளைக் குறைத்து விட்டு எலைட் கடைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவுள்ளதாம்.
திமுக - பாமக போட்டா போட்டி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அ்மல்படுத்தக் கோரி பாமக, மதிமுக உள்பட பல கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சசி பெருமாள் உள்ளிட்ட தனி நபர்களும் போராடி வருகிறார்கள். மதுரையைச் சேர்ந்த சட்ட மாணவி நந்தினி தொடர்ந்து போராடி வருகிறார். இந்தநிலையி்ல்தான் திடீரென திமுக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
மது விலக்கை அமல்படுத்துவோம்- திமுக
திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கருணாநிதி அறிவித்தார். ஆனால் அவரே எதிர்பாராத வகையில் கடும் எதிர்ப்புகள் வந்து குவிந்தன. கருணாநிதி நடிக்கிறார், தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி அறிவித்துள்ளார் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.
முந்திக் கொள்ளப் பார்க்கும் அதிமுக
ஆனால் திமுகவின் அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் ஆதரவு தென்படுவதாக மோப்பம் பிடித்து விட்ட அதிமுக, தேர்தலுக்கு முன்பு அதிமுகவுக்கு வர வேண்டிய ஓட்டுக்கள் திமுகவுக்குப் போய் விடுமோ என்ற அச்சத்தில் முந்திக் கொண்டு மது விலக்கை அமல்படுத்துவது குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நாடகமாடும் திமுக, பாமக - சமூக ஆர்வலர்கள்
இதற்கிடையே, திமுகவும், பாமகவும், மது விலக்கு தொடர்பாமாக மிகப் பெரிய நாடகத்தை நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். மது விலக்கு குறித்து வாய் கிழியப் பேசும் இவர்கள் மது உற்பத்தி தொடர்பாக நேரடித் தொடர்புடைய வர்த்தகத்தி்ல் ஈடுபட்டு வரும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பார்களா, கட்சியை விட்டு நீக்குவார்களா என்று கேட்டுள்ளனர்.