அப்பல்லோவில் 60வது நாள்... தனி அறையில் என்ன செய்கிறார் ஜெயலலிதா?
அப்பல்லோவில் 60வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. சனிக்கிழமை தனி அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் வீடு திரும்புவது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: செப்டம்பர் 22ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார். இன்றோடு 60 நாட்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதாவின் முகத்தை அதிமுக தொண்டர்கள் காணமுடியாமல் தவித்து வருகின்றனர்.
நுரையீரல் நோய் தொற்று பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 58 நாட்களாக ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு லண்டனில் இருந்து வந்த சிறப்பு டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக, சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சுழற்சி முறையில் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
தனி வார்டுக்கு மாற்றம்
சனிக்கிழமையன்று மாலை சிறப்பு வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நேரடியாக போயஸ்கார்டனுக்கு அனுப்புவதுதான் முதலில் திட்டமாக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து அறைக்கு மாற்றியபிறகு முதல்வரின் உடல்நிலை எப்படி இருக்கிறது? அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறதா? என்பதை சில தினங்கள் கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதன்காரணமாகவே அவர் தனியறையில் மாற்றப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
சிறப்பு பூஜை
தனியறைக்கு மாற்றும் முதல்நாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார் சசிகலா. இதன் பின்னர் நல்லநேரம் பார்த்து ஜெயலலிதாவின் அறையை மாற்றினர். இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து இதுவரை எந்த செய்திக் குறிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஜெயா டி.வி.யில் மட்டும் இதுதொடர்பாக சனிக்கிழமை 6 மணிக்கு ப்ளாஷ் போடவே தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
சிறப்பு பூஜை
தனியறைக்கு மாற்றும் முதல்நாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார் சசிகலா. இதன் பின்னர் நல்லநேரம் பார்த்து ஜெயலலிதாவின் அறையை மாற்றினர். இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து இதுவரை எந்த செய்திக் குறிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஜெயா டி.வி.யில் மட்டும் இதுதொடர்பாக சனிக்கிழமை 6 மணிக்கு ப்ளாஷ் போடவே தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
சிறப்பு பிரார்த்தனைகள்
ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பவும் பல்வேறு பிரார்த்தனைகள் நேற்று மருத்துவமனை முன்பு நடைபெற்றது. மகளிர் அணி சார்பில் துர்க்கை அம்மன் பூஜை நடந்தது. இதேபோல், விளக்கு பூஜையிலும் அதிமுக பெண் தொண்டர்கள் கலந்துகொண்டனர். நேர்த்திக்கடனாக 108 தேங்காய்களும் உடைக்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகம் அடைந்தனர்.
எழுதி பழகுகிறார் ஜெ
தனியறைக்கு மாற்றப்பட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா எழுதி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரவ உணவு மட்டுமே சாப்பிட்டு வந்த ஜெயலலிதா ஞாயிறன்று முதன் முறையாக திட உணவு சாப்பிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 60 நாட்களாக மருத்துவர்கள், சசிகலா, இளவரசி தவிர ஜெயலலிதாவை வேறு யாரும் இதுவரை பார்க்கவில்லை. தனியறைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த நிலையில் அமைச்சர்கள் சந்திக்க அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விரைவில் டிஸ்சார்ஜ்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 60 நாட்கள் ஆகிவிட்டது. அவர் வீடு திரும்புவது எப்போது என்றும், வழக்கமான பணிகளை எப்போது மேற்கொள்வார் என்றும் தொண்டர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் முதல்வர் விரும்பும் போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.