கர்நாடகாவின் சங்கரமூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க ஜெ. எதிர்ப்பு?
சென்னை: தமிழக ஆளுநராக கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும் சட்ட மேலவை தலைவருமான சங்கரமூர்த்தியை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென்னை தமிழக ஆளுநராக நியமிக்க ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநராக தற்போது உள்ள ரோசையாவின் பதவிக்காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவருக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. கர்நாடகா மாநில பாஜகவின் மூத்த தலைவரான சங்கரமூர்த்தி அம்மாநில சட்டமேலவையின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
அவரை அண்மையில் டெல்லிக்கு அழைத்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, உங்களுக்கு புதிய பொறுப்பு காத்திருக்கிறது; தயாராக இருங்கள் என கூறியிருந்தார். இதை சங்கரமூர்த்தியும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க கூடாது. அப்படி கர்நாடகத்தை சேர்ந்தவரை தமிழக ஆளுநராக நியமித்தால் காவிரி பிரச்சனையின் போது குழப்பம் ஏற்படலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது.
அத்துடன் குஜராத் முதல்வர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஆனந்தி பென்னை, தமிழக ஆளுநராக நியமிக்கலாம் எனவும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.