பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெ.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று தேவர் திருமகனாருக்கு மலர் அஞ்சலி செலுத்திய போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அங்கே குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட கழகப் பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி தற்போது, தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட உள்ளது. முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் அணிவிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.