ஓபிஎஸ் மகன், 'நத்தம்' மருமகனின் கட்சிப் பதவி பறிப்பு- உள்ளடி ஒ.செ.க்குகளுக்கும் ஆப்பு தொடங்கியது!
சென்னை: அதிமுகவில் அசைக்க முடியாத சக்திகளாக வலம் வந்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்குமார், மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருமகன் கண்ணன் ஆகியோரது கட்சிப் பதவிகளை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா. இதேபோல் சட்டசபை தேர்தலில் மேலிடம் அறிவித்த வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் உள்ளடி வேலைபார்த்த ஒன்றிய செயலர்களையும் களை எடுக்கும் பணியையும் ஜெயலலிதா தொடங்கி உள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னரே அதிமுகவின் ஐவர் அணி என அழைக்கப்பட்ட டீமின் சீனியர்களான ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க அரசியல் வட்டாரங்களில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த இருவரிடமும் முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படும் பெருந்தொகையான பணம் மன்னார்குடி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எழுதி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் சட்டசபை தேர்தலில் நத்தம் விஸ்வநாதனை வெல்ல முடியாத ஆத்தூர் தொகுதிக்கு மாற்றினார் ஜெயலலிதா. அவர் நினைத்தபடியே நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.
நம்பர் 2 இடத்தில் திண்டுக்கல் சீனிவாசன்
ஜெயலலிதா அமைச்சரவையில் ஓ. பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டாலும் முந்தைய ஆட்சியில் அவர் வசம் இருந்த பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது. அமைச்சரவையில் நம்பர் 2 இடத்துக்கு நத்தம் விஸ்வநாதனால் ஒதுக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனையும் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் நத்தம் விஸ்வநாதன் வசம் இருந்த திண்டுக்கல் மாவட்ட செயலர் பதவியையும் இன்று பறித்துவிட்டார் ஜெயலலிதா.
அத்துடன் நத்தம் தொகுதி செயலராக இருந்த அவரது மருமகன் கண்ணன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் நத்தம் விஸ்வநாதன் குடும்பத்தின் பிடியில் இருந்து திண்டுக்கல் அதிமுக விடுபட்டிருப்பதை அக்கட்சி தொண்டர்கள் ரகசியமாக கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் தேனி மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளரான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் வைத்ததுதான் சட்டம் என்றிருந்தது. அதற்கும் இன்று முடிவுகட்டிவிட்டார் ஜெயலலிதா.
தேனி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.டி.சிவகுமார், தேனி மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரவீந்திரநாத்குமார், உத்தமபாளையம் ஒன்றிய ஜெ.ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஸ்டார் எம்.ரபீக், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.செல்லமுத்து ஆகியோர் இப்பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட அதிமுக செயலராக ஓ. பன்னீர்செல்வத்தால் ஓரங்கட்டப்பட்டு வந்த ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிய செயலர்களுக்கும் ஆப்பு
இதேபோல் நீலகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் என பலரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக மேலிடத்தின் இந்த களையெடுப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றே தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் உள்ளடி வேலைபார்த்த ஒன்றிய செயலர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடித்தால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும்; 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் பலமான வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்ற வியூகத்தின் அடிப்படையில் மேலிடம் இந்த களை எடுப்பை தொடங்கியுள்ளது என்கின்றன் அதிமுக வட்டாரங்கள்.