ஜெ. 67 வது பிறந்தநாள் விழா: களைகட்டும் பால்குடம், கூட்டு பிராத்தனை, விளையாட்டு போட்டிகள்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களும், மகளிர் அணியினரும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
வடபழனியில் அ.தி.மு.க. மகளிரணி சார்பில் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் 5,067 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
சென்னையில் 3 மதங்களையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டமான கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
5067 பால்குடம்
ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளையொட்டி, இன்றுகாலை சென்னை வடபழனியில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் 5,067 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. சிவன்கோயிலில் இருந்து முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பாலபிஷேகம் செய்தனர்.
கோகுல இந்திரா-சசிகலா புஷ்பம்
இந்த ஊர்வலத்தில், அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுலஇந்திரா, மகளிரணி செயலாளர் சசிகலா புஷ்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
நீடுழி வாழ வழிபாடு
"அம்மா" நீடுழி வாழவேண்டும் என்றும், மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காகவும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டதாக அமைச்சர் கோகுல இந்திராவும், அமைச்சர் வளர்மதியும் தெரிவித்தனர்.
அமைச்சர் வளர்மதி
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் மகளிருக்கான பல்வேறு வகை விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பா.வளர்மதி பரிசுகளை வழங்கினார்.
போட்டிகள், பரிசுகள்
நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள விளையாட்டு திடலில் இன்று காலை இந்தப் போட்டிகள் நடந்தன. ஓட்டப்பந்தயம், ஸ்பூனில் எலுமிச்சை பழத்துடன் ஓடுவது, மியூசிக்கல் சேர், உறியடி, பலூன் உடைக்கும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடந்தன.
1067 புடவைகள்
இந்த போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர் பா.வளர்மதி, வெற்றி பெற்றவர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கினார். பின்னர் அங்கேயே ஏழை மக்கள் 1067 பேருக்கு புடவைகள், ஜெயலலிதா படம் போட்ட டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் ஆகியவைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
செந்தில் பாலாஜி ரத்ததானம்
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்த தான முகாமை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, லோக்சபா துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர். அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்தனர்.
கூட்டு பிராத்தனை
ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்னையில் அ.இ.அ.தி.மு.க. ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், சர்வ சமய கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
10,000 பேர் பங்கேற்பு
சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைய சமுதாயத்தினர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில், மதுரை ஆதினம், பேராயர் மா.பிரகாசம், அல்ஹாஜ் முகமது பிலால் மற்றும் அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
67 கோவில்களில் தரிசனம்
விழுப்புரத்தில் 67 பெண்கள் 67 கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்யும் பயணத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் , சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், திருநாள்ளாறு சனீஸ்வரன் ஆலயம் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்யவுள்ளனர்.
கன்னியாகுமரியில்
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் 67 பேர், மக்களின் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, ஆன்மிக யாத்திரை தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் வடசை பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 67 பேர் கடந்த 17 ஆம் தேதி மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் ஆன்மிக பயணத்தை தொடங்கி அவர்கள் நேற்று திருவண்ணாமலை வந்தடைந்தனர். அங்கு அருணாசலேசுவரர் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வழிபட்ட அவர்கள், திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் பயணம்
ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க வேண்டி, திருவாரூரில் இருந்து நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் ஆலயத்திற்கு 23 பேர் கொண்ட குழுவினர் இருச்சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.