நம்பினால் நம்புங்கள்... “ஆளும்கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம்”... ஜெ. பிரச்சாரம்!
புதுவை: புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாக்களிப்பது தற்கொலைக்கு சமம் என அங்கு நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் தேவை, ஆட்சி மாற்றம் தேவை என தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சாதனை ஆட்சி தொடர மீண்டும் அதிமுகவிற்கே வாக்களிக்கும்படி அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, புதுவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அங்கு ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் தனது புதுவைப் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-
ஊழல் கூட்டணி...
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே இமாலய ஊழல் கூட்டணி என்பது தான் பொருள். நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி. விளையாட்டிலே கூட விளையாடியவர்கள் என்றால், அந்த கூட்டணி எப்படிப்பட்ட ஊழல் கூட்டணி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கோஷ்டிப் பிரச்சினை...
காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிப் பிரச்னையை தீர்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாக திறமையின்மை காரணமாக இங்கு விவசாயமே வீழ்ந்து விட்டது. இங்கே எந்தவித தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. புதிதாக தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படாததோடு, இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடந்துகொண்டிருக்கிறது.
எதிரியும், துரோகியும்...
எனவே, காங்கிரஸ்-தி.மு.க. ஊழல் கூட்டணியை இந்தத் தேர்தலில் நீங்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தற்போது புதுச்சேரி மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியைவிட மோசமானது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த கட்சி அப்படித்தான் இருக்கும். காங்கிரஸ் எதிரி என்றால், என்.ஆர். காங்கிரஸ் துரோகி.
தற்கொலைக்கு சமம்...
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமம். எனவே, என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தைப் போலவே...
புதுவையில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையப்பெற்றால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகின்றன. அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும். கைவிடப்பட்ட பெண்கள், ஏழைத்தாய்மார்கள், பெண்கள் குடும்பத்தலைவராக இருக்கின்ற குடும்பங்களுக்கு கறவைப் பசுக்களும், வெள்ளாடுகளும் தமிழ்நாட்டில் வழங்கப்படுகின்றன. அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும். மகளிர் திருமண உதவித்திட்டம் இங்கேயும் செயல்படுத்தப்படும்.
பெண்களுக்கான திட்டங்கள்...
தமிழ்நாட்டில் வழங்கப்படுவது போல் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும். திருமண உதவியாக பெண்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். பட்டப்படிப்பு அல்லது பட்டயம் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் ஆகியவை இங்கேயும் செயல்படுத்தப்படும்.
கடன் தள்ளுபடி...
புதுச்சேரிக்கு நிதி சலுகையுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி அரசின் கடன் சுமையான 6,400 கோடி ரூபாயை முற்றிலும் தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரிக்கென புதிய தொழில் கொள்கையினை உருவாக்கி அதன் மூலம் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரவும், இடம் பெயர்ந்த தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டு வரவும், நலிந்த தொழிற்சாலைகளை வலுவடையச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில்கள் துவங்க ஊக்கம் அளிக்கப்படும். அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஒற்றை சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சி மாற்றம் தேவை...
அ.தி.மு.க.வுக்கு 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி பெற வேண்டிய திட்டங்களை பெற்றுத்தருவார்கள். மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அதை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் போராடி, வாதாடி பெற்றுத்தருவார்கள் என்பதை நான் உத்தரவாதமாக இங்கே கூறுகிறேன். அந்த உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். உங்களின் வாழ்வு வளம் பெறும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லப்படும். இவற்றை எல்லாம் நீங்கள் பெற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி ஆட்சி மாற்றம் தான்" என இவ்வாறு அவர் உரையாற்றினார்.