எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா.. அரசியல் எதிராளி இன்றி தனித்து விடப்பட்ட கருணாநிதி.. உருவான வெற்றிடம்
கருணாநிதிக்கு இருந்த ஒரே அரசியல் போட்டியாளரான ஜெயலலிதாவும் இப்போது இல்லை என்பதால் தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசியலில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருந்த இரண்டாவது அரசியல் போட்டியாளரும் இப்போது இல்லை. இதனால் கருணாநிதிக்கு, ஈடுகொடுக்கும் போட்டியாளர் இல்லாமல் தமிழக அரசியல் வெறுமையடைந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியும், எம்ஜிஆரும் நண்பர்களாக இருந்த நிலையில், திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறி அதிமுகவை தொடங்கியது முதல் கருணாநிதியின் அரசியல் எதிராளியாக மாறினார் எம்ஜிஆர். அவர் உயிரோடு இருந்த காலம்வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை.
இந்த நிலையில், எம்ஜிஆர் 1987ல் மறைந்ததும், 1989ல் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்து திமுகவிடம் வீழ்ந்தது. எனவே கருணாநிதிக்கு அரசியலில் எதிராளி இல்லை என்றுதான் திமுகவில் பேச்சு எழுந்தது. ஆனால், 1991ல் விஸ்வரூபம் எடுத்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு மிகப்பெரிய போட்டியாளராக மாறினார்.
இரு கட்சிகளும் தலா 5 வருடங்கள் என ஆட்சி செய்ய தொடங்கின. இவ்வாண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு, அதிமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்தது என்ற சாதனையை நிலைநாட்டினார் ஜெயலலிதா.
இதனால் கருணாநிதி பக்கம் மிகவும் பின்னடைவை சந்தித்தது.
இப்போது ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், போட்டியாளர் இல்லாத நிலையில் உள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. போட்டியாளரின் தகுதிதான், எதிர்த்து நிற்பவரின் தகுதியையும் தீர்மானிக்கும். அந்த வகையில் கருணாநிதிக்கு பெருமை சேர்த்ததே எதிரே நின்ற போட்டியாளர்கள்தான் என்றால் அது மிகையில்லை. எனவேதான், கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், "ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருந்தால் அதோடு கருணாநிதியின் பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.