கொடநாடு கொலையில் சிக்கிய ஜெ. மாஜி டிரைவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை?
கொடநாடு பங்களாவின் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கியுள்ள ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்று தகவல் சேலத்தில் பரவியது. இதனை போலீசார் மறுத்துள்ளனர் என்
சேலம்: கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ரகசிய ஆவணங்களை கொள்ளையடிக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது
5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் சிக்கினர்.
விபத்து
இந்தக் கொலை விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருந்த அதே நேரத்தில், ஜெயலலிதாவின் மாஜி கார் ஓட்டுநர் கனகராஜ் தீவிரமாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் போலீசாரிடம் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.
என்கவுண்டர்
இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான கனகராஜை விசாரித்தால் உண்மைகள் பல வெளியே தெரிந்துவிடும்; அதனால் அவரை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சேலத்தில் பரபரப்பு தகவல் பரவியது.
மறுப்பு
இதனால் பதற்றமான போலீஸ் தரப்பு, கனகராஜ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும் செய்தி வெளியிட்டு எஸ்கேபானது. போலீசார் அப்படி சொன்ன பிறகுதான் கொடநாடு கொலை சம்பவத்தில் உள்ள மர்மம் மேலும் அதிகரித்துள்ளது.
மர்மம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் நடைபெற்ற ஒரு விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார் என்றால் விபத்து நடந்த இடம் எது என்று இன்னும் தெரியவில்லை. எந்த இரு வாகனத்திற்கும் இடையே விபத்து நடைபெற்றது என்ற தகவலையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை.
ரகசியத்தை மறைக்க..
இதனால், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ஏதோ ஒரு ரகசியத்தை மறைப்பதற்காகவே கனகராஜ் பலி கொடுக்கப்பட்டுள்ளார் என்றே சேலத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும், இதன் பின்னால் உள்ள சதி விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.