ஜெ. உடல் நலம் .... அப்பல்லோவில் விசாரித்த அமித் ஷா, அருண் ஜெட்லி #Jayalalithaa
சென்னை: பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள், அதிமுக மூத்த தலைவர்களிடம் நலம் விசாரித்தனர்.
அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோருடன் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் உடன் சென்றார். மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, பொன். ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரை அதிமுக எம்.பி., தம்பித்துரை, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்த தலைவர்கள், செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அப்பல்லோவில் ஜெயலலிதா
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு கடந்த 22 தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராகுல் வருகை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்ததை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அப்பல்லோவிற்கு சென்று முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
தலைவர்கள் நலம் விசாரணை
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர். கேரள முதல்வர் பினரயி விஜயன் அம்மாநில ஆளுநர் பி.சதாசிவம் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியைச் சந்தித்துப் பேசினர்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
அப்பல்லோவிற்கு ராகுல் காந்தி வந்து சென்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வராதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சென்னைக்கு வந்துள்ளனர். பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோர் 2 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடமும், அதிமுகவின் மூத்த தலைவர்களிடமும் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
அமைச்சர்களிடம் விசாரணை
அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோருடன் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் உடன் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரை அதிமுக எம்.பி., தம்பித்துரை, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
ஜெ., நலம் பெற வாழ்த்து
ஜெயலலிதாவை சந்தித்த அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அதே நேரத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அப்பல்லோ அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும் நிபுணர்கள் குழுவில் உள்ள பிற மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேவையான சுவாச உதவி, நோய் எதிர்ப்பு ஆன்ட்டி பயாடிக் சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் பிற ஆதரவுச் சிகிச்சைகள் உட்பட பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் திங்கட்கிழமையன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
தொடரும் பிரார்த்தனை
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி, அப்பல்லோ மருத்துவமனை முன்பு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அ.தி.மு.க. மகளிரணியினர் வழக்கம்போல் தேங்காய் உடைத்தும், சூடன் ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். தமிழகம் முழுவதும் பல கோவில்களில் பால்குடம் எடுத்தும், யாகங்கள், பூஜைகள் செய்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.