ஜெயலலிதா உடல் கவலைக்கிடம்… அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப முடிவு
முதல்வர் ஜெயலலிதா உடல் கவலைக்கிடமாக உள்ளதால் அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளதையடுத்து, சென்னையில் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. நேற்று இரவில் இருந்தே கடைகள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று காலையில் இருந்து நிலைமை சீரடைந்து இயல்பு நிலை திரும்பியது. ஆனால் மதியம் 1 மணி போல் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீண்டும் தமிழகம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்த புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் அரை நாள் விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், அரசு அலுவலக ஊழியர்களும் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீடு திரும்பும் எத்தனிப்பில் தயாராகி வருகின்றனர்.