அப்பல்லோவில் ஜெ., 28வது நாள்: 8வது நாளாக அறிக்கையில்லை... தொடரும் பூஜைகள்... # Jayalalithaa
சென்னை: காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று அப்பல்லோ மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு தொடர் சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 10ம் தேதிக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து அறிக்கையும் வெளியாகவில்லை என்பதால் தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் தீவிரமடைந்துள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கூட்டம் தினசரியும் அதிகரித்து வருகிறது. தேங்காய்கள் உடைப்பதும், பூசணிக்காய் சுற்றுவதும் தீவிரமடைந்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் நிலை தேறிவருகிறது. மருத்துவ சிகிச்சைகள் பலனளித்த நிலையில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையளிக்க 2 சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவர்கள் சென்னை அப்பல்லோ வந்து மூன்றாவது நாளாக சிகிச்சையளித்து வருகிறார்கள்.
முதல்வரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், மிகவிரைவில் பூரண உடல் நலத்துடன் வீடுதிரும்பி, மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் திருப்தியடையாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
அறிக்கையில்லாத 8வது நாள்
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கடைசியாக கடந்த 10ம் தேதி அறிக்கை வெளியானது. 8 நாட்கள் ஆன பின்னரும் இன்னமும் அறிக்கை வெளியாகவில்லை. முதல்வர் குணமடைந்து வருவதால் போட்டோ உடன் அறிக்கை வெளியிடலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உண்ணாநோன்பு
முதல்வர் பூரண உடல்நலம் பெற வேண்டி, சென்னை அப்பல்லோ மருத்துவமனை வாயிலில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், இஸ்லாமியர்கள் நேற்று முதல் 3 நாட்களுக்கு உண்ணாநோன்பு தொடங்கியுள்ளனர். தினமும் அதிகாலை 4.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாநோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த 3 நாட்களும் நபில் தொழுகையும், திருக்குர்ஆன் ஓதலும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
பூசணிக்காய் திருஷ்டி
ஜெயலலிதாவிற்கு திருஷ்டி கழிக்கும் விதமாக மருத்துவமனை முன்பு பூசணிக்காய்களை சுற்றி, 108 தேங்காய்களை உடைத்து பிரார்த்தனை நடத்தினர். மகளிர் அணி சார்பாக நடைபெற்ற இந்த பூஜையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, நிர்மலா பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
3 லட்சம் தீப விளக்குகள்
ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி மதுரையில், மாவட்ட அதிமுக சார்பில் 3 லட்சம் தீப விளக்கு வழிபாடு காலை 6 மணி முதல் 7.30 மணி வரை ஒரே நேரத்தில் மதுரை மாநகரில் உள்ள 76 வட்டங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், சிம்மக்கல் ஆஞ்சநேயர் கோவில், சிம்மக்கல் சொக்கநாதர் கோவில், இன்மையில் நன்மைதருவார் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில், பைரவர் கோவில், பேச்சியம்மன் கோவில், திண்டுக்கல் ரோடு முருகன் கோவில், எஸ்.எஸ்.காலனி விநாயகர் கோவில், எல்லிஸ் நகர் கருமாரியம்மன் கோவில், வில்லாபுரம் கருமாரியம்மன் கோவில், வெங்கலக்கடைத் தெரு பிள்ளையார் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் 3 லட்சம் தீப விளக்கு வழிபாடு நடைபெற்றது.
108 மூலிகை யாகம்
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் கோவிலில் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி 108 மூலிகைகளால் மகாயாகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகதன்வந்திரி ஹோமம், ஆயுஸ் ஹோமம் உள்பட ஒன்பது ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. யாக நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
108 தேங்காய் உடைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியக் கழகம் சார்பில், மாகரல் மாகாலீஸ்வரர் திருக்கோயில், ரெட்டேரி விநாயகர் கோயில், காவாந்தண்டலம் சோளீஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
ஆயிரத்து எட்டு அர்ச்சனை
திருத்துறைப்பூண்டி ஸ்ரீபெரகன்நாயகி சமேத ஸ்ரீபிறவிமருந்தீஸ்வரர் கோயிலில், ஸ்ரீநவகிரக சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. மூலவர் மற்றும் அம்பாளுக்கு ஆயிரத்து எட்டு திருநாம மந்திரங்களைக் கொண்ட லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
லண்டன் முருகனுக்கு அபிஷேகம்
தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் முதல்வர் நலன்பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுவருகின்றனர். லண்டன் மாநகரில் தமிழர்கள் அங்குள்ள முருகன் மற்றும் துர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், நடத்தினர். இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர்.