குழந்தைகளுக்கு "குமாரசாமி" பெயர் வைங்கப்பா.. கோவை சந்திரனின் குபீர் ஐடியா!
சென்னை: கால்குலேட்டர் தப்பு பண்ணுச்சா.. இல்லை கணக்குப் போட்ட குமாரசாமி தப்பு செய்தாரா என்பதே இன்னும் சரியாக தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு வந்த கண்டமும் இன்னும் கூட முழுமையாக விலகவில்லை.. இந்த லட்சணத்தில், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு குமாரசாமி என்று பெயர் வைக்க ஆரம்பித்துள்ளனராம் அதிமுகவினர்.
குமாரசாமிதான் இப்போதைக்கு அதிமுகவினரின் குலசாமி... கும்பிடும் சாமி!.. குன்ஹா தீர்ப்பால் சிறைக்குப் போன ஜெயலலிதாவை, குமாரசாமியின் தீர்ப்பு வெளியில் கொண்டு வந்து விட்டதை அதிமுகவினர் இன்னும் கூட கொண்டாடி வருகின்றனர். சாமி கும்பிடப் போகும்போது குமாரசாமி பெயருக்கும் சேர்த்து வேண்டிக் கொள்கிறார்களாம்.
குமாரசாமிக்கு கட் அவுட் வைக்காத குறையாக அவரை கொண்டாடி வருகிறார்கள் அதிமுகவினர். இந்த நிலையில் தற்போது அதற்கும் மேல போக ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்களது குடும்பங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு குமாரசாமியின் பெயரை வைக்க ஆரம்பித்துள்ளனராம்.
கோவை மாநகராட்சியின் 84வது வார்டு கவுன்சிலர் சந்திரன் இந்த வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இவர் தனது வார்டுக்குட்பட்ட மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். அங்கு அனுமதிக்கப்பட்டு பிரசவத்திற்காக காத்திருக்கும் கர்ப்பிணிகளை அணுகி, அவர்களில் அதிமுகவினர் யாராவது இருந்தால் அவர்களிடம் ஆண் குழந்தை பிறந்தால் மறக்காமல் குமாரசாமி என்று பெயர் வையுங்கள் என்று கேட்டுக் கொண்டு வருகிறாராம்.
பெண் குழந்தை பிறந்தால் "அம்மா" பெயரை மறக்காம வச்சுடுங்க என்றும் அவர் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறாராம். இந்தப் பெயர்களை வைத்தால் பொன், பொருள் போன்ற ஆதாயம் கிடைக்குமோ என்ற நம்பிக்கையில், பல பெண்கள் இந்த ஐடியாவுக்கு ஓகே சொல்லி வருகிறார்களாம்.
இதுகுறித்து சந்திரன் கூறுகையில், குமாரசாமிதான் எங்கள் அம்மாவை விடுவித்தவர். அவர் மீது தனிப் பாசமே பிறந்து விட்டது. அவருக்கு எங்களால் ஆன நன்றிக் கடனாக இதைச் செய்கிறோம். அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்றார் சந்திரன்.