சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நினைத்து ஜெ.வுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது - சசி வாக்குமூலம்
உச்சநீதிமன்றத்தில் வெளியாக இருந்த சொத்துக்குவிப்பு தீர்ப்பை நினைத்து ஜெயலலிதா மன அழுத்தத்தில் இருந்தார் என்று சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நினைத்து ஜெயலலிதா அதிக மன அழுத்தத்தில் இருந்தால் இதுவே அவரது உடல்நிலை பாதிக்க காரணமானது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தீபா, தீபக், சசிகலா உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
சசிகலா வாக்குமூலம்
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். சசிகலா வாக்குமூலம் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை வழக்கறிஞர் அரவிந்த், விசாரணை ஆணையத்திடம் சீலிடப்பட்ட கவரில் அளித்தார்.
ஜெயலலிதாவிற்கு மன அழுத்தம்
அவரது வாக்குமூலம் அடங்கிய பிரமாணப்பத்திரத்தில், ஜெயலலிதா கடும் மன அழுத்தத்தில் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு
எப்போது வெளியாகுமோ என்ற பதற்றத்தில் இருந்தார். தான் தண்டிக்கப்பட்டு விடுவோமா என்றும் வேதனை பட்டார் ஜெயலலிதா அதுவே ஜெயலலிதாவின் உடல்நிலையை பாதித்தது என்று சசிகலா கூறியுள்ளார்.
உடல்நிலை பாதிப்பு
செப்டம்பர் 21ஆம் தேதியே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுத்தார். 22ஆம் தேதியன்று அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இரவு 9.30 மணியளவில் பாத்ரூம் செல்வதற்கும் படுக்கை அறையிலும் நான் உதவிகள் செய்தேன்.
மருத்துவமனையில் அனுமதி
உடல்நிலை பாதிப்படையவே உறவினர் டாக்டர் சிவகுமாருக்கு போன் செய்தேன். அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து இரண்டு ஆம்புலன்ஸ்களை வரவழைத்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என்று சசிகலா கூறியுள்ளார்.
மன அழுத்தம் அதிகரிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த போதே ஜெயலலிதாவிற்கு மனதளவில் வேதனை அதிகரித்தது. ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்தது. விடுதலையாகி வந்த பின்னரும் பாதிப்பு தொடர்ந்தது. எனவேதான் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார் என்றும் சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மாத்திரை சாப்பிட்ட ஜெ
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகும் ஜெயலலிதா உடல் பாதிக்கப்பட்டது. நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16ஆம் தேதிவரை மாத்திரை சாப்பிட்டார். 19ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது என்றும் சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.