நெல்லை: சசிகலா புஷ்பா உறவினர் உட்பட 2 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் சசிகலா புஷ்பா எம்பியின் உறவினர் உட்பட 2 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கட்டுப்பாடு கொள்ளைகளை மீறியதாக கோவை மாவட்டத்தில் 3 நிர்வாகிகளை நீக்கியும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சசிகலா புஷ்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜ்யசபாவில் பேசும் போது ஜெயலலிதா மீது குற்றம் சாட்டியதோடு, உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கண்ணீர் சிந்தினார். இதனைத் தொடர்ந்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் சசிகலா புஷ்பாவின் உறவினர்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளளன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த சிங்கை ஆர்.ரங்கநாதன் (சவுரிபாளையம் பகுதி அ.தி.மு.க. செயலாளர்), பி.ஜெயகிருஷ்ணன் என்ற போனஸ்பாபு (சிங்காநல்லூர் பகுதி அ.தி.மு.க. செயலாளர்), ஆர்.மாரப்பன், மாநகராட்சி கவுன்சிலர் (சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி) நீக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தை சேர்ந்த வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்), ஜி.டி.லாரன்ஸ் (பணகுடி பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர், பேரூராட்சி மன்ற தலைவர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார். பதவியில் இருந்து மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து, கட்சி வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.