பட்ஜெட்டைக் கொண்டு போய் சமாதியில் வைக்கிறார் ஜெயக்குமார்.. ஸ்டாலின் காட்டம்
நிதிநிலை அறிக்கையை முதலில் சமாதியில் வைத்து விட்டு பிறகு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நிதிநிலை அறிக்கையை முதலில் சமாதியில் வைத்து விட்டு பிறகு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபை விதிகளையும், அரசியல் சட்டத்தையும் மீறி சட்டமன்ற நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்திருப்பது கவலையளிக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக நிதியமைச்சர் ஜெயக்குமார், மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று வணங்கி விட்டே சட்டசபைக்கு வந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.
புனிதம் பாழ்பட்டு விட்டது
குற்றவாளி வழிகாட்டுதலில் செயல்படும் பினாமி அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் அவர்கள் இன்றைய தினம் தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார். 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் சமாதியில் முதலில் வைத்து, பிறகு அதை அங்கிருந்து எடுத்து வந்து சட்டப் பேரவையில் தாக்கல் செய்து நிதி நிலை அறிக்கையின் புனிதத்தையும், சட்டமன்ற, அரசியல் சட்ட மாண்புகளையும் அடியோடு குழி தோண்டி புதைத்து விட்டார்.
சமாதியா? பேரவையா?
இந்த அரசியல் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நிதியமைச்சருக்கு தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். "வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆளுநர் குறிப்பிடும் நாளன்று பேரவையில் அளிக்கப்பெற வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 181(1) தெளிவாக விளக்கியிருக்கிறது. "பேரவை" என்பது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைதான். சமாதிகளை பேரவையாக கருத முடியாது.
காலில் போட்டு மிதிப்பதா?
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் அரசியல் சட்டப்பிரிவு 208 (1)ன் கீழ் நிறைவேற்றப்பட்டது என்பதால், அந்த விதிகள் அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றவை. இப்படியொரு சூழலில் "அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் நடந்து கொள்வேன்" என்று மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் முன்பு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்ற பேரவை விதிகளையும், அரசியல் சட்டத்தையும் மீறி சட்டமன்ற நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்திருப்பது கவலையளிக்கிறது.
கேலிக்கூத்து
நிதிநிலை அறிக்கையை முதலில் சமாதியில் வைத்து விட்டு பிறகு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல- சட்டமன்ற ஜனநாயகத்தையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
மரபு மீறல்
பேரவையில் தாக்கல் செய்யப்படும் வரை நிதிநிலை அறிக்கை பற்றிய ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது மரபு. ஆனால் அந்த மரபுகளையும் மீறி, நிதி நிலை அறிக்கையை சமாதி வரை எடுத்துச் சென்ற நிதியமைச்சர் ஜெயக்குமார் தான் எடுத்துக் கொண்ட "பதவிப்பிரமாணம்" மட்டுமல்ல- அமைச்சராகும் போது எடுத்த "ரகசிய காப்பு பிரமாணத்தையும்" மீறிவிட்டார். பேரவை மாண்புகளை சீர்குலைத்து அரசியல் சட்டத்தை மீறிய நிதியமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மீது தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.