ஆந்திர என்கவுண்டர்: பலியான 20 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி: ஜெ. அறிவிப்பு
சென்னை: ஆந்திர என்கவுண்டரில் பலியான 20 தமிழர்களின் குடும்பத்திற்கும் அதிமுக சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
''ஆந்திரா மாநிலம், சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சேலம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்துள்ளேன். தற்போது ஊடகங்கள், பொது நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, ஆந்திர காவல் துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது தானா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
இறந்த தொழிலாளர்கள் சட்டத்திற்கு விரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்திருப்பார்கள் என்று கருதினாலும், செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் தேவையான அளவுக்கு மட்டுமே பலப்பிரயோகம் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. ஆந்திர அரசு உண்மை நிலையை அறிவதற்குத் தேவையான விசாரணையை நடத்திட வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆந்திர முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, காசோலையை வழங்குவார்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.