இதே கல்யாண மண்டபத்தில்.. 2011ல்.. சசி குடும்பத்தை ஒரு பிடி பிடித்த ஜெ.!
தலைமை மீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய காட்சிகள் இப்போது அதிமுக தொண்டர்கள் கண் முன்னால் வந்து செல்கிறது.
2011ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெயலலிதாவிடம் இருந்து அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் சசிகலா மற்றும் அவரது உறவுகளை கட்சியில் இருந்து துரத்தி விட்டார்.
வி.கே.சசிகலா, எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், எம்.பழனிவேல், தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.
இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் டிசம்பர் 30ஆம் தேதிதான் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என்றார்.
அந்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார் அமைச்சர் உதயகுமார். அதிமுக பொதுக்குழு கூடும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் பேச்சை நினைவூட்டுகிறோம்.
அரசியல்வாதிகள் நிலை
அரசியல்வாதிகளும் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். அப்படி நீக்கப்படும்போது, சரி நாம் தவறு செய்துவிட்டோம்; ஆகவே, இது நியாயமாக நமக்குக் கிடைக்கவேண்டிய தண்டனைதான்; இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள்.
செல்வாக்கு கிடைக்குமா?
ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள். தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்புகொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம். நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம்.
பழிவாங்கும் நடவடிக்கை
இப்போது எங்களைப் பகைத்துக்கொண்டால், நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களைப் பழிவாங்கி விடுவோம். ஆகவே, எங்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
மன்னிப்பு கிடையாது
அப்படித் தலைமை மீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக்கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று பேசினார் ஜெயலலிதா.
திரும்ப வந்த சசிகலா
அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை' என சொன்ன சசிகலாவை திரும்ப சேர்த்துக் கொண்டார்.
ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் சசிகலாவின் உறவுகள் வந்து ஒட்டிக்கொண்ட பின்னர் நிலைமை தலைகீழாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் சசிகலா. 9 மாதங்களில் மீண்டும் பொதுக்குழு கூடுகிறது. சசிகலா நீக்கம் செய்யப்படுவாரா? பார்க்கலாம்.