ஒருபோதும் மன்னிப்பே கிடையாது... சசிகலா குடும்பம் பற்றி ஜெ... வைரல் வீடியோ
தலைமை மீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ பற்றிய சிடியை அமைச்சர் உதயகுமார் இன்று வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தலைமை மீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக்கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு கட்டம் கட்டிவிட்டு வீட்டை விட்டு துரத்தினார் ஜெயலலிதா. அதே ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இது குறித்து விளக்கம் அளித்த வீடியோ தற்போது வைரலாகிறது.
கட்சியை விட்டு நீக்கம்
அரசியல்வாதிகளும் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள்.
தவறுக்கு தண்டனை
அப்படி நீக்கப்படும்போது, சரி நாம் தவறு செய்துவிட்டோம்,ஆகவே, இது நியாயமாக நமக்குக் கிடைக்கவேண்டிய தண்டனைதான்... இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள்.
துரோகம் செய்தவர்கள்
ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள். தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்புகொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம். நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம்.
பகைத்து கொள்ளாதீர்கள்
இப்போது எங்களைப் பகைத்துக்கொண்டால், நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களைப் பழிவாங்கி விடுவோம். ஆகவே, எங்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
மன்னிப்பு கிடையாது
அப்படித் தலைமை மீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக்கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று பேசியுள்ளார்.