மகம் நட்சத்தில் வந்த காலபைரவாஷ்டமி - ஜெயலலிதா நலம் பெற சிறப்பு யாகம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டி அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றோடு 60 நாட்களாகிவிட்டன. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, இரு தினங்களுக்கு முன்னர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதா உடல் நலம் பூரணமாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி அதிமுக தொண்டர்கள் சிறப்பு யாகங்களையும், வழிபாடுகளையும் நடத்தி வருகின்றனர்.
சிறப்பு யாகம்
சென்னையில் அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் கலந்து கொண்டு இன்று சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டார். வடசென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், புரசைவாக்கத்தில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் கோயிலில், மிருத்யுஞ்ஜய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆயுள் விருத்தி ஹோமம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார்வளாகத்தில் அமைந்துள்ள வைத்தியநாதர் சுவாமி திருக்கோவிலில் பால், பன்னீர், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டன. ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
காலபைரவாஷ்டமி
64 வருடத்திற்கு ஒருமுறை தேய்பிறை அஷ்டமி, மகம் நட்சத்திரம் ஆகியவை ஒன்றாக வரும் நாளான இன்று இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நறுமணப் பொருட்களைக்கொண்டு, ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீசுதர்சன ஹோமம்
பாளையங்கோட்டையை அடுத்த பொன்னாக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வர் - உண்ணாமலை அம்பாள் திருக்கோயிலில் கணபதி ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீமிருத்யுஞ்ஜய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.
108 மூலிகைகளால் யாகம்
கோட்டை ஈஸ்வரன் கோயிலில் 108 மூலிகைகளைக் கொண்டு ஆயுஷ் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் எழுந்தருளியுள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் 108 மூலிகைகளை கொண்டு மிருத்யுஞ்ஜய உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.