திருவள்ளுவர் சிலை நிறுவ நடவடிக்கை: ஹரீஷ் ராவத்துக்கு நன்றி தெரிவித்த ஜெ., !
சென்னை: உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில் :தமிழக மக்களால் தெய்வப் புலவராகப் போற்றப்படும் திருவள்ளுவருக்கு ஹரித்துவாரில் சிலை அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக, தமிழகத்தில் பெரிய அளவில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பது தங்களுக்குத் தெரியும். இதுதொடர்பாக, பிரதமருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தேன்.
உணர்ச்சிபூர்வமான இந்தப் பிரச்னையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் விரைவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடவடிக்கை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
ஹரித்துவாரில் உள்ள மேளாபவனில் திருவள்ளுவர் சிலையை நிறுவ தாங்கள் ஏற்பாடு செய்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் மேற்கொண்ட இந்த உடனடி ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்காக, தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.