நிவாரண நிதி... நிதிஷ், நவீன்பட்நாயக்குக்கு மட்டும் நன்றி கடிதம் எழுதிய ஜெ. அப்ப சித்தராமையாவுக்கு?
சென்னை: தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி கடிதம் எழுதியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்துக்கு முதன் முதலாக வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை.
இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஜெ. அனுப்பிய கடிதம்:
கடந்த 3-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாங்கள் அளித்த 5 கோடி ரூபாய் நன்கொடைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்றில் இல்லாத அளவு பெய்த இந்த மழையும், அது ஏற்படுத்திய அழிவும் ஏராளமான துன்பத்தை அளித்துவிட்டது. உங்களின் அக்கறையும், தாராளமனமும் என்னை நெகிழவைத்தது.
இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெ கூறியிருப்பதாவது:
கடந்த 4-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், ஒடிஷா முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் தர முன்வந்ததற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மழையினால் ஏற்பட்ட பேரழிவின் அளவு மிக அதிகமானது. இந்த இயற்கை இடர்பாட்டின் விளைவுகளை போக்க எனது அரசாங்கம் அயராது பணியாற்றி வருகிறது. உங்களின் அக்கறைக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
அதே நேரத்தில் கர்நாடகாவின் நிதி உதவியை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.