ஜெ. கைரேகை சர்ச்சை வழக்கு.. அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் பதிலளிக்க ஹைகோர்ட் கால அவகாசம்
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கை ரேகை பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் எம்எல்ஏ ஏ.கே. போஸ் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கை ரேகை பதிவு வழக்கில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ பதில் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்துடன் சேர்த்து பணப்பட்டுவாடா குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலும் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே. போஸ் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளராக டாக்டர் பி. சரவணன் நிறுத்தப்பட்டார்.
சர்ச்சையில் ஜெ. கைரேகை
ஏ. கே. போஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஜெயலலிதா உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கை ரேகை பதிவு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.
வழக்குப் பதிவு
இதனைத் தொடர்ந்து நடைபெற்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றி பெற்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானார். இந்த வெற்றியை எதிர்த்தும், ஜெயலலிதாவின் கைரேகை பதிவில் உள்ள சந்தேகம் குறித்தும் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
மருத்துவமனையில் ஜெ.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் அளித்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸை அங்கீகரித்து வேட்பு மனுவில், இடதுகை பெருவிரல் ரேகையை பதிவு செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை விவரம் என்ன?
இதுதொடர்பான அனைத்து ஆவணங்களுடன், மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகள் உள்ளிட்ட விவரங்களையும் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராகி சாட்சி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏ.கே.போஸ்ஸுக்கு நோட்டீஸ்
இந்த வழக்கில் உரியப் பதில் அளிக்க ஏ.கே. போஸ் எம்எல்ஏவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, உரியப் பதில் அளிக்கக் கால அவகாசம் தேவை என ஏ.கே. போஸ் சார்பில் மனு செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம் காலஅவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.