சட்டசபையில் காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் - திமுக புறக்கணிப்பு
சென்னை : தமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிய நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் இன்று அவையை புறக்கணித்துள்ளனர்.
சட்டசபையில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த 14 நாட்களாக நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அந்தந்த துறைகளுக்கான அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக சட்டசபையில், இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.
எட்டு மணி நேர பணியுடன் ஊதிய உயர்வு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், காவல் துறையில் காலியாக உள்ள, 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போலீசார் தரப்பில் முன்வைக்கப்பட்டள்ளது.
முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்படாத தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு துணியை கட்டி அவைக்கு வந்தனர். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீதான சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் 3வது முறையாக மறுத்து விட்டார். இதனையடுத்து தி.மு.க.மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காவல் துறை மீதான விவாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் தவிர, மற்ற திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக எம்.எல்.ஏக்கள் விவாதத்தையும் புறக்கணித்தனர்.
தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இன்று காலை கேள்வி நேரம் இல்லை என்பதால்,சட்டசபை தொடங்கியவுடன் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. 2006-11ல் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி பொள்ளாட்சி ஜெயராமன் பேசினார்.
கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா, காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையினர் தமிழகத்தில் அமைதியைப் பேணிக்காத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் பல போராட்டங்கள், நடத்தங்களை அமைதியாக நடத்த அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் செயல்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.