மருத்துவமனையில் ஜெ... சாலையிலேயே உட்கார்ந்திருக்கும் அமைச்சர்கள், தொண்டர்கள்.. போக்குவரத்து மாற்றம்
சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவைக் காண அமைச்சர்களும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்துள்ளதால் சென்னை கிரீன்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN CM admitted at Apollo Hospital.Police, cadres & ministers take over the area. Patients have to be wheeled in from outside. #Jayalalithaa pic.twitter.com/Wc2wvs9uih
— anna isaac (@anna_isaac) September 23, 2016
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் நள்ளிரவு முதலே அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். காலையில் தொண்டர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் இருந்து கிரிம்ஸ் சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
முதல்வர் விரைவில் குணமடைய தொண்டர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். அம்மாவிற்கு காய்ச்சல் என்று கேள்விப்பட்ட உடன் விடிய விடிய மருத்துவமனை வாசலில் உறங்காமல் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே திருப்பரங்குன்றம், தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் முக்கிய ஆலயங்களில் அதிமுகவினர் பிரார்த்தனையும், சிறப்பு அபிஷேக, ஆராதனையில் ஈடுபட்டுள்ளனர்.