அப்பல்லோவில் காவிரி பிரச்சினையை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் ஜெ., - ஆர்டிஐ விளக்கம்
ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு முன்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக ஆர்.டி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா இதய முடக்கம் ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது அரசு.
தகவல் அறியும் உரிமை சட்டம்
இந்த நிலையில், இதுதொடர்பாக சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் பெற்றுள்ளார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
அவருக்கு தகவல் ஆணையம் அனுப்பிய விளக்கத்தில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்மோ கருவி சிகிச்சை
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னதாக அவருக்கு தவறான மருந்துகள் தரப்பட்டதாக கூறுவது அவதுறான தகவல். ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு முன்பாக இதுதொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
மருத்துவ செலவு
ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுக்காக அரசு சார்பில் பணம் எதுவும் செலவிடப்படவில்லை என்றும் ஆர்டிஐ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனக்கு எந்த விதமான தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில் எக்மோ கருவி அகற்றப்பட்டது குறித்து ஓபிஎஸ்க்கு தெரியும் என்று ஆர்டிஐ விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது